டூல் கிட் சர்ச்சை.. டிவிட்டர் அலுவலகத்திற்கே நேரடியாக சென்ற போலீஸ்.. அதிகாரிகளிடம் தீவிர விசாரணை!
டெல்லி: டெல்லி அருகே குர்கான் மற்றும் லடோவில் உள்ள டிவிட்டர் அலுவலகத்தில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் டூல் கிட் விவகாரம் தொடர்பாக டிவிட்டர் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் டூல்கிட் என்று கூறி பாஜக வெளியிட்ட சில ஆவணங்கள் இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை மத்திய அரசு எதிர்கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இதை காங்கிரஸ் கட்சி உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் இதற்கு என்று டூல் கிட் ஒன்றை உருவாக்கி பாஜகவை பொய்யாக விமர்சித்து வருவதாக பாஜக புகார் அளித்தது.

டூல் கிட்
அதாவது பாஜக தலைவர்களை எப்படி விமர்சிக்க வேண்டும், பிரச்சனையை எப்படி சமூக வலைத்தளத்தில் பெரிதாக்க வேண்டும் என்று காங்கிரஸ் டூல் கிட் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் டிவிட்களை செய்ததாக பாஜக கூறியது. முக்கியமாக மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமனை டிவிட்டரில் விமர்சிக்க வேண்டும், கும்பமேளாவை டிவிட்டரில் விமர்சிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் செயல்திட்டங்கள் அடங்கிய டூல் கிட் காங்கிரஸ் மூலம் உருவாக்கப்பட்டதாக பாஜக கூறியது.

டிவிட்டர்
இந்த நிலையில் இந்த டூல் கிட்களை வெளியிட்ட பாஜக தலைவர்களின் டிவிட்டர் கணக்குகளில் "Manipulated" டேக் என்ற முத்திரையை டிவிட்டர் நிறுவனம் குத்தியது. பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் இந்த டூல் கிட்டை வெளியிட்டு இருந்தனர். இவர்கள் எல்லோரின் டிவிட்டிலும் "Manipulated" டேக் என்ற முத்திரையை டிவிட்டர் நிறுவனம் குத்தியது.

என்ன டேக்
அதாவது இவர்கள் செய்த டிவிட்கள் தவறான தகவல்களை, செய்திகளை, வழிகாட்டுதல்களை கொண்டு இருப்பதாக டிவிட்டர் கூறியுள்ளது. கிட்டத்தட்ட இவர்கள் பொய்யான செய்திகளை பரப்புவதாக டிவிட்டர் முத்திரை குத்தியது. மத்திய அரசு இதை பார்த்து கொதித்து போய், டிவிட்டரிடம் இதை நீக்கும்படி கூறியது. ஆனால் டிவிட்டர் நிறுவனம் இந்த டேக்கை நீக்கவில்லை. மத்திய அரசு கோரிக்கை வைத்த பின்பும் கூட மேலும் சில பாஜக தலைவர்களின் கணக்கில் இதே முத்திரையை டிவிட்டர் குத்தியது.
|
விசாரணை
டெல்லி அருகே குர்கான் மற்றும் லடோவில் உள்ள டிவிட்டர் அலுவலகத்தில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் டூல் கிட் விவகாரம் தொடர்பாக டிவிட்டர் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகிறது. டூல் கிட் விவகாரத்தை டெல்லி போலீஸ் விசாரித்து வரும் நிலையில், எப்படி முன்முடிவுகளோடு டிவிட்டர் பாஜக தலைவர்களின் டிவிட்டில் "Manipulated" டேக் போட்டது என்று போலீஸ் விசாரித்து வருகிறது.

ஆதாரம்
டிவிட்டர் நிறுவனத்திடம் டூல் கிட் விவகாரம் தொடர்பாக ஆதாரம் எதுவும் உள்ளதா, அப்படி இல்லை என்றால் "Manipulated" டேக் போடப்பட்டது ஏன், என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. டிவிட்டர் அலுவலகத்தில் இப்படி எல்லாம் போலீஸ் இதற்கு முன் விசாரணை நடத்தியது இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் இப்படி திடீரென விசாரணை நடத்துவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications