உ.பி, உத்தரகாண்ட்,பஞ்சாப் தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் டெல்லியில் போராடும் விவசாயிகள்?
டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க) எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் களமிறங்கக் கூடும் என தெரிகிறது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருப்பதால் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது.

டெல்லியில் போராட்டம்
அதேநேரத்தில் டெல்லியில் 8 மாதங்களாக மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி விவசாயிகளும் இந்த தேர்தலை குறிவைத்துள்ளனர். அண்மையில் மேற்கு வங்க மாநிலம், தமிழகம் சட்டசபை தேர்தல்களின் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க கூடாது என டெல்லியில் போராடும் விவசாயிகள் குழு பிரசாரம் செய்தது.

பாஜகவுக்கு எதிர்ப்பு
ஆனால் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் தேர்தல்களில் இதனைவிட தீவிரமாக பிரசாரம் செய்வது என களமிறங்க காத்திருக்கின்றனர் விவசாய சங்க நிர்வாகிகள். வாக்கு கேட்டு வரும் பாஜகவினரை கிராமங்களுக்குள் நுழைய விடாமல் தடுக்கவும் விவசாய சங்கங்கள் திட்டமிட்டு வருகின்றனர். இன்னும் சில விவசாய சங்கங்கள் பஞ்சாப், உ.பி. தேர்தல்களில் போட்டியிடலாம் எனவும் கருத்து தெரிவிக்கின்றன.

தேர்தலில் போட்டியா?
இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு பேட்டியளித்த விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், தேர்தல்களில் வாக்களித்து வெற்றி பெற வைப்பது விவசாயிகள். அந்த விவசாயிகள் தேர்தல்களில் போட்டியிடுவது மட்டும் எப்படி தவறாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பாஜக அரசு மீது கோபம்
டெல்லியில் இடைவிடாமல் போராட்டம் நடத்தும் விவசாயிகள் இப்படி, மிஷன் பஞ்சாப், மிஷன் உ.பி. என பேசத் தொடங்கி உள்ளனர். டெல்லியில் கொட்டும் பனி, வாட்டும் குளிர், வதைக்கும் வெயில் என 8 மாதங்களாக முகாம் போட்டு போராட்டம் நடத்தியும் மத்திய பா.ஜ.க. அரசு, விவசாய சட்டங்களை திரும்பப் பெறவில்லை என்கிற கோபம் விவசாயிகளிடையே கடுமையாக உள்ளது.

பாஜகவுக்கு நெருக்கடி
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசும், டெல்லி போராட்டத்துக்கு செல்லக் கூடிய விவசாயிகளை தடுக்கவில்லை. பஞ்சாப் மாநில கிராம பஞ்சாயத்துகளில் கூட்டம் போட்டு சுழற்சி முறையில் டெல்லி போராட்டங்களில் பங்கேற்றும் வருகின்றனர். விவசாயிகள் ஒருங்கிணைந்து தேர்தல் களத்துக்கு போனால் அல்லது போட்டியிட்டால் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications