15 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்... பனிமூட்டம்...புத்தாண்டின் முதல்நாளில்...உறைந்துபோன தலைநகர்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று 1.1 டிகிரி செல்ஸியஸ் வெப்ப நிலையே இருப்பதால், டெல்லி நகரமே கடும் குளிரால் உறைந்த நிலையில் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுங்குளிருடன், வானை மறைக்கும் அடர் பனிமூட்டத்துடன் புதிய ஆண்டை தொடங்கி இருக்கின்றனர் டெல்லிவாசிகள்.
நமது நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அளவு குறைந்து கடும் குளிர் வாட்டி வருகிறது. டிசம்பரில் சராசரி குறைந்த வெப்ப நிலை அளவு மிகவும் சரிந்தது. அதாவது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக குறைந்த வெப்ப நிலை எட்டியது.

இந்த நிலையில் நேற்று தலைநகரின் குறைந்தபட்ச வெப்ப நிலை 3.3 டிகிரி செல்சியசாக இருந்தது. இன்று அது 1.1 டிகிரி செல்ஸியஸ் ஆக சரிந்துள்ளது. இதனால் நகர் முழுவதும் பனிப்போர்வைக்குள் மூடியபடி உள்ளது.
சப்தர்ஜங் மற்றும் பாலம் உள்ளிட்ட பல பகுதியில் அடர் பனிமூட்டம் காணப்பட்டதால், சாலைகள் கண்ணுக்கு தெரியவில்லை. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். சாலையோரம் வசிப்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். தன்னார்வலர்கள் அவர்களுக்கு போர்வைகளை வழங்கினார்கள். கடும் குளிரை தாங்க முடியாத சிலர் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.
டெல்லியில் கடந்த ஆண்டு ஜனவரியில் 2.4 டிகிரி செல்சியஸ் என்று மிகக்குறைந்த வெப்ப நிலை பதிவானது. பொதுவாக 10 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் வெப்ப அளவு குறையும் போது குளிர் அலை என்று அறிவிக்கப்படும். டிசம்பரில் மட்டும் 8 முறை குளிர் அலை வீசியது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது மிக குறைந்த வெப்ப நிலை நிலவுகிறது. கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் 0.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications