டெல்லியில் வெடித்த i20 கார் ஓனர் யார்? குர்கானில் ஒருவரை பிடித்தது போலீஸ்! கைமாறிடுச்சாம்!
டெல்லி: டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஹூண்டாய் i20 காரின் வாகன உரிமையாளர் குர்கானில் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வெடித்த கார் தற்போது யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை போலீசார் இப்போது விசாரித்து வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே நேற்று (திங்கட்கிழமை) மாலை கார் ஒன்று வெடித்தது. சிக்னல் அருகே மெதுவாக சென்று கொண்டிருந்த கார் வெடித்தது. இதன் காரணமாக அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். 24 காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டெல்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. செங்கோட்டையில் சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னல் அருகே ஹூண்டாய் ஐ 20 கார் 6.52 மணியளவில் வெடித்தது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த நிலையில், அங்கிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
சம்பவம் நடந்த10 நிமிடத்தில் டெல்லி போலீசார், ஸ்பெஷல் கிரைம் பிராஞ்ச் போலீசார் விரைந்தனர். தொடர்ந்து, என்எஸ்ஜி, என்ஐஏ குழுவினருடன் தடயவியல் துறை நிபுணர்களும் இணைந்து விசாரணையை துவக்கியுள்ளனர். அனைத்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஹூண்டாய் i20 காரின் வாகன உரிமையாளர் குர்கானில் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான கார் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டது என விசாரணை நடத்தி குர்கானில் வசிக்கும் சல்மான் என்பவரை போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
அந்த நபர், தன் வாகனத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டதாக போலீசாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சல்மான் தனது காரை ஓக்லாவில் உள்ள தேவேந்திரா என்பவருக்கு விற்றதாக கூறியுள்ளார். அந்த வாகனம் மீண்டும் அம்பாலாவில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டது, ஹரியானா பதிவு எண் பலகை கொண்டது என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்த காரின் தற்போதைய உரிமையாளரைக் கண்டறிய போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் வாகனம் கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications