Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலி வழக்குகள், புனையப்பட்ட சாட்சிகள்.. டெல்லி 2020 கலவர வழக்குகளில் போலீசாரின் முறைகேடுகள் அம்பலம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2020 டெல்லி கலவரம் தொடர்பான பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டே வருகிறார்கள். வழக்கை முடிக்க வேண்டும் என்பதற்காகவே பல போலி ஆதாரங்கள், புனையப்பட்ட வாக்குமூலங்களை டெல்லி போலீசார் சேர்த்துள்ளன என்றும் இதன் காரணமாகவே பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிற்பதில்லை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த 2019ல் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டம் நடந்து வந்தது. இந்தப் போராட்டம் மாதக் கணக்கிலும் நீடித்தது. அப்போது தான் 2020 பிப்ரவரி மாதம் டெல்லியில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. அதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Delhi Riots Cases Courts Flag Fabricated Evidence and Criticize Police for Misconduct in many cases

முறைகேடுகள்

இந்தக் கலவரம் தொடர்பாக போலீசார் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து பலரையும் சிறையில் அடைத்துள்ளனர். இருப்பினும், டெல்லி கலவரம் தொடர்பான வழக்குகளில், காவல்துறை விசாரணையில் பல குளறுபடிகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகப் பிரபல ஆங்கில நாளேடான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.. போலியான சாட்சிகள், புனையப்பட்ட ஆதாரங்கள், காவல் அதிகாரிகளால் சேர்க்கப்பட்ட கூடுதல் தகவல்கள், பொய்யான வாக்குமூலங்கள் என பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏகப்பட்ட தவறுகள்

டெல்லி கலவரம் தொடர்பான வழக்குகளில் இதுவரை 97 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 93 பேர் தொடர்பான நீதிமன்ற ஆவணங்களை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆய்வு செய்ததில், குறைந்தது 17 வழக்குகளில் (அதாவது சுமார் ஐந்தில் ஒரு பங்கு வழக்குகளில்) காவல்துறை விசாரணையில் தவறுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

டெல்லி வன்முறை தொடர்பாக 695 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 2025 வரை 116 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 97 வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.. 19 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

போலீஸ் செய்த தவறு

குறைந்தது 12 வழக்குகளில் காவல்துறையினர் போலியான சாட்சிகளை அல்லது புனையப்பட்ட ஆதாரங்களைச் சேர்த்திருப்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு வழக்குகளில், சாட்சிகள் தங்களுடைய வாக்குமூலங்களை போலீசாரே எழுதிவிட்டனர் அல்லது சொல்லாத தகவல்களைச் சேர்த்துவிட்டனர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல வழக்குகளில், நீதியை நிலைநாட்டுவதை விட வழக்கை முடிப்பதிலேயே காவல்துறை ஆர்வம் காட்டியதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது..மேலும், ஒரு வழக்கில் ஆவணங்களில் முறைகேடு நடந்திருப்பதை நீதிபதியே சுட்டிக்காட்டியுள்ளார். அடையாளம் காணும் அணிவகுப்பை நடத்தத் தவறியது உள்ளிட்ட பல தவறுகளை நீதிமன்றங்களே சுட்டிக்காட்டியுள்ளன.

ஆதாரங்களைப் புனைந்த போலீஸ்

அப்படி தான் நியூ உஸ்மான்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பிரவீன் சிங் விடுவித்தார். அப்போது அவர் கூறிய கருத்துகள் தான் முக்கியமானது. அதாவது, "விசாரணை அதிகாரி ஆதாரங்களைப் புனைந்துள்ளார். இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு முடித்து வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம். இத்தகைய சம்பவங்கள் சட்டத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை அழிப்பதாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

மொத்தம் 17 வழக்குகளில் இதுபோல போலீசாரால் புனையப்பட்ட ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியிருக்கிறது. அந்த 17 வழக்குகளில் அதிகபட்சமாக 5 வழக்குகள் தயாள்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டவை. மேலும், கஜூரி காஸ் மற்றும் கோகல்பூரி ஆகிய காவல் நிலையங்களில் பதிவான தலா 4 வழக்குகள், ஜோதி நகர், பஜன்புரா, ஜாஃப்ராபாத் மற்றும் நியூ உஸ்மான்பூர் காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கிலும் புனையப்பட்ட ஆதாரங்கள் இருந்துள்ளன.

நீதிமன்றத் தீர்ப்புகள்

ஜோதி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கலவரத்தின் போது குற்றங்களை நேரில் கண்டதாகக் கூறப்படும் முகமது அஸ்லம் என்ற ஒருவர் உண்மையில் இருந்தாரா என்பதே சந்தேகத்துக்குரியது என்றும் அவர் ஒரு கற்பனைப் பாத்திரமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறி நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டோரை விடுவித்தது.

கஜூரி காஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வழக்கு புனையப்பட்டது என்பதையும், வழக்கை முடிப்பதற்காகவே ஒருவர் குற்றவாளி போலக் காண்பிக்கப்பட்டார் என்பதையும் டெல்லி போலீஸ் அறிந்திருந்ததால் தான் அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை எனத் தெரிகிறது எனச் சொல்லி, அவரை விடுவித்தது.

இவை இரண்டும் எடுத்துக்காட்டுகள் தான். இதுபோல பல நீதிமன்றத் தீர்ப்புகளில் டெல்லி போலீசார் இந்த வழக்குகளை எந்தளவுக்கு மோசமாக நடத்தினார்கள் என்பதை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+