பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் கருப்பு ஆடை கூடாது! உத்தரவு போட்ட டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகள்
டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார். முன்னதாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சில கல்லூரிகளில் பிரதமரின் உரை நேரடியாக ஒளிபரப்பப்படுவதால் மாணவர்கள் கருப்பு உடை அணிந்து வரக்கூடாது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் விடுதலை போராட்ட வீரர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும் உருவெடுத்திருக்கின்றனர். இந்த அளவுக்கு சிறப்புமிக்க இப்பல்கலைக்கழகம் தற்போது தனது 100வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை பல்கலை. நிர்வாகம் சிறப்பாக கொண்டாடி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்ட பிரதமர், மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பயணத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மோடி கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பரவி வருகிறது.
முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்திக்கு பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மூன்றாவது பிரதமர் என்கிற பெருமையை நரேந்திர மோடி பெற்றிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் கூடுதல் கட்டிடங்களையும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் திறந்து வைத்தார்.
பிரதமரின் வருகையை ஆசிரியர் சங்கத்தினர், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் சில புறக்கணித்துள்ளன. பிரதமரின் உரை மற்றும் அவர் அடிக்கல் நாட்டு நிகழ்வு அனைத்தும் காணொலி வாயிலாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்துக் கல்லூரி, டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூரி மற்றும் ஜாகிர் உசேன் டெல்லி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
முன்னதாக இந்த கல்லூரிகளில், மாணவர்கள் இன்றைய தினம் கட்டாயமாக கல்லூரிக்கு வர வேண்டும் என்றும், கருப்பு உடை அணிந்து வரக்கூடாது எனவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்துக் கல்லூரி ஆசிரியர் பொறுப்பாளர் மீனு ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"பிரதமர் மோடியின் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 5 வருகைகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்பது கட்டாயமாகும். யாரும் கண்டிப்பாக கருப்பு உடை அணிந்து வரக்கூடாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த அறிவிப்பு கல்லூரியால் வெளியிடப்படவில்லை என்று மறுத்திருக்கிறார்.
"பிரதமர் உரையின் நேரலையில் மாணவர்களும், ஆசியர்களும் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு மெயில் அனுப்பியிருந்தோம். ஆனால், வருகை கட்டாயம் கிடையாது" என்றும் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
அதேபோல டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் கல்லூரி வெளியிட்ட அறிவிப்பிலும், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் தவறாமல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி ஜாகீர் உசேன் கல்லூரியும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தை பொறுத்த அளவில், மாணவர்கள் கட்டாயமாக வரவேண்டும் என்று எந்த உத்தரவும் பிறக்கப்படவில்லை என்றும், இன்றைய தினம் வருகைப்பதிவும் கிடையாது என்றும் பதிவாளர் விகாஸ் குப்தா கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க முடியாது என்பதால்தான் பிரதமரின் உரை நேரடியாக ஒளிபரப்பப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி பல்கலை. கீழ் இயங்கும் ராம்ஜாஸ் கல்லூரி, மிராண்டா ஹவுஸ் மற்றும் கிரோரிமால் கல்லூரி போன்ற கல்லூரி நிர்வாகமும் மாணவர்களின் வருகையை கட்டாயமாக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளன. இருப்பினும், பிரதமர் உரையாற்றிய காலை 10 மணி முதல் 12 மணி வரை பல கல்லூரிகளில் வகுப்புகள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications