தீபாவளிக்கு இப்படி செய்வீங்களா? “பக்ரீத் அன்று வேலை நாள்”: டெல்லி பல்கலை முடிவுக்கு கடும் எதிர்ப்பு!
டெல்லி: பக்ரீத் பண்டிகை நாளான ஜூன் 29ஆம் தேதியன்று வேலை நாளாக கருதப்படும் என்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வரும் ஜூன் 30ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட உள்ள மூன்று புதிய கட்டிடங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அன்று அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த விழாவில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங், இந்த நிகழ்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதற்கு முந்தைய நாளான ஜூன் 29ஆம் தேதி வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என பல்கலைக்கழக இணை பதிவாளர் இன்று அறிவிப்பு வெளியிட்டார். ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை ஒட்டி அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
"நூற்றாண்டு நிறைவு விழா 30 ஜூன் 2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவிற்கு முன்னதாக அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவு செய்யும் நோக்கில், 29 ஜூன் 2023 வியாழன் அன்று பல்கலைக்கழகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் வேலை நாளாக அனுசரிக்கப்படும். ஜூன் 29, 2023 அன்று பண்டிகை கொண்டாட விரும்பும் ஊழியர்களுக்கு அலுவலகத்திற்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளை மீறி ஜூன் 29-ஆம் தேதியை வேலை நாளாகக் கடைப்பிடிக்கும் பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர்களில் ஒரு பிரிவினர் கண்டித்துள்ளனர். இந்த அறிவிப்பை பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்களின் ஜனநாயகக் கூட்டமைப்பு ஜூன் 29 அன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்கு கட்டாய விடுமுறை இந்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆனால், டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் அன்றைய நாளை வேலை நாளாக அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், "முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்கின்றனர். டெல்லி பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு அதன் மதவெறி மனப்பான்மை, மற்றும் ஒரு சமூகத்தை வேண்டுமென்றே தனிமைப்படுத்தும் முயற்சி கொண்ட ஒரு நடவடிக்கையாகும்" என விமர்சித்துள்ளனர்.
"2023 ஆம் ஆண்டிற்கு முன்பே அரசிதழில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்களின் பட்டியல் பல்கலைக்கழகத்திற்குத் தெரியும். அப்படி இருக்கும்போது இந்த தேதியை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன? சம்பந்தப்பட்ட நாள் ஹோலி அல்லது தீபாவளியாக இருந்திருந்தால் பல்கலைக்கழக நிர்வாகம் இதேபோன்ற நடவடிக்கையை எடுத்திருக்க வாய்ப்பில்லை. இந்த விரும்பத்தகாத அறிவிப்பை பல்கலைக்கழக நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும்" என்று பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications