விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா?.. டெல்லி கால்நடை மருத்துவர் விளக்கம்!
டெல்லி: விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவாது என்று டெல்லி கால்நடை மருத்துவர் சந்தீப் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாடாய்படுத்தி விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினமும் 4,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வந்தன.

குறையும் பாதிப்பு
தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 2,00,000-க்கும் கீழ் குறைந்து ஆறுதல் அளிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோனாவே தாக்கம் ஏற்படுத்தி வரும் நிலையில் கருப்பு பூஞ்சை நோய், வெள்ளை பூஞ்சை நோய் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

தகவல்கள் பரவின
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் முதலில் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதாகவும், இதுதான் மனிதர்களுக்கு வைரஸ் பரவ காரணம் என்று தகவல்கள் வேகமாக பரவின.

உலக சுகாதார அமைப்பு தெளிவு
இதனால் இந்தியா, அமெரிக்கா, சீனா அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளை கைவிடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த விலங்குகள் உணவு கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன. கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்று ஐ.நா வல்லுனர்களும், உலக சுகாதார அமைப்பும் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது.

விலங்குகளை கைவீடாதீர்கள்
ஆனாலும் விலங்குகளிடம் இருந்துதான் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறது என்ற வதந்தி நீடித்து வருகிறது. இந்த நிலையில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவாது என்று டெல்லி கால்நடை மருத்துவர் சந்தீப் சிங் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ' விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவும் என்பது வதந்தியாகும். நோய்களால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்த போதும் எனக்கு தொற்று ஏற்படவில்லை.விலங்குகளை பராமரித்தால் கொரோனா பாதிக்கும் என்ற வதந்தியை நம்பி செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அவற்றை கைவிட வேண்டாம்' என்று சந்தீப் சிங் கூறியுள்ளார்.











Click it and Unblock the Notifications