டெல்லி கலவரம்.. அப்பா காலையாவது கொடுங்க.. காத்திருக்கும் குல்ஷன்.. இந்த கொடுமை யாருக்கும் வரக்கூடாது
டெல்லி: குல்ஷன் இருக்கும் மனநிலை இந்த உலகத்தில் எந்த பெண்ணுக்கும் வரக்கூடாதது. "ஐயோ.. ஒன்றாக சேர்ந்து வந்து அடிக்கிறார்களே.." என்று தனது தந்தையிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு பிறகு, எஞ்சியுள்ளது அவரது கால் மட்டுமே. அதையாவது தன்னிடம் தந்தால் இறுதிச் சடங்கு செய்வேன் என வேண்டுகோள்விடுத்து, டெல்லி மருத்துவமனையில், காத்திருக்கிறார் குல்ஷன்.
டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மிக மோசமான பகுதிகளில் ஒன்று, சிவ் விகார். இங்குதான் குல்ஷன் தந்தை முகமது அன்வர் வசித்து வந்தார். குல்ஷனுக்கு, நசீருதின் என்ற கணவரும், 7 மற்றும் 8 வயதில் இரு மகன்களும் உள்ளனர். ஹபூர் பகுதியில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
பிப்ரவரி 25ம் தேதி குல்ஷனுக்கு மறக்க முடியாத சோக நாளாகியுள்ளது. தனது தந்தை அன்வரிடமிருந்து அன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "நம்ம வீட்டு பக்கம் ஒரே கலவரமா இருக்கு.." என அவர் பதற்றத்தோடு சொல்லியுள்ளார். இதனால், குல்ஷனுக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
ஐயோ வந்துவிட்டார்கள்
"உங்களுக்கு ஒன்னும் இல்லையேப்பா.." என பதறிப்போய் கேட்டுள்ளார் குல்ஷன். "நஹி பேட்டா.." என்று பதில் வந்தது தந்தையிடம். இதைக் கேட்டு சற்று குல்ஷன் ஆசுவாசமாவதற்குள், திடீரென ஒரு சத்தம். "ஒரு கும்பல் என்னை சுற்றி வளைத்துள்ளது. நான் மாட்டிக்கொண்டுள்ளேன்" என்று சத்தம் போட்டுள்ளார் அன்வர். அவ்வளவுதான் போன் கட்டாகிவிட்டது. பிறகு பல முறை போனில் குல்ஷன் தொடர்பு கொண்டும், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக பதில் வந்துள்ளது.
வீட்டுக்குள் எரித்த கும்பல்
அதற்கு பிறகுதான் நடந்துள்ளது அந்த கொடூரம். அன்வரை சுட்டு கொன்ற கும்பல், அவர் உடலை வீட்டுக்குள் எரித்து, வீட்டை தீ வைத்து கொளுத்தியுள்ளது. முன்னதாக வீட்டுக்குள் இருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளது. அத்தோடு விடவில்லை.. "இங்கே இருந்த சலீம் எங்கே.. இன்னொரு முஸ்லீம் இங்கே உண்டே" என்று கத்தி கூச்சலிட்டு அந்த கொலை கும்பல், அங்கும் இங்கும் தேடிப் பார்த்துள்ளது.
தப்பிய சகோதரர்
சலீம் வேறு யாருமல்ல, அன்வரின் சொந்த சகோதரர். தனது அண்ணன் படுகொலை செய்யப்படுவதை பார்த்தும், பெரும் கும்பலை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல், கண்ணீரோடு அங்கேயிருந்து தப்பியோடியுள்ளார் அன்வர். அதனால் உயிர் தப்பியுள்ளார். குல்ஷனுக்கு சலீம்தான் போனில், இந்த கொடுமையை சொல்லியுள்ளார்.
கால் மட்டும்
அலறியடித்து ஓடி வந்த குல்ஷன், எரிந்து போன வீட்டுக்குள், தனது தந்தையை தேடியுள்ளார். அங்கே கிடந்தது தனது தந்தையின் ஒற்றைக்கால் மட்டும்தான். தன்னை தோள் மீதும், மார் மீதும் போட்டு வளர்த்த தந்தையின் கால்தான் அது என்பதை உணர்ந்து, வெடித்து அழ அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அன்வர் உடலின் வேறு எந்த பாகமும் கிடைக்கவில்லை. வீட்டோடு சேர்த்து, அவரது உடலும் தீயில் கருகி சாம்பலாக போய்விட்டது.
விதிமுறை
இப்போது அன்வர் கால் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் உள்ளது. அதையாவது கொடுங்க, இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என கதறுகிறார் குல்ஷன். டிஎன்ஏ சோதனையில், அன்வர் கால்தான் என்று உறுதிசெய்துவிட்டே கொடுக்க முடியும்.. அதுதான் ரூல்ஸ் என்கிறது மருத்துவமனையும், காவல்துறையும். காத்துக்கிடக்கிறார் குல்ஷன்.
என்ன செய்வார் குல்ஷன்
குழந்தையாக இருந்தபோது மட்டுமல்ல, இறக்கும்வரை, குல்ஷனை தனது தோளில் தாங்கி நிறுத்தி காப்பாற்றி வந்தவர்தான் அன்வர். அவர் தந்தை மட்டுமல்ல, குல்ஷனின் தாயுமானவர். சில வருடங்கள் முன்பு குல்ஷன் கணவருக்கு ஆசிட் விபத்தில் கண் பார்வை பறிபோயுள்ளது. அப்போது முதல், குல்ஷனின் குடும்பத்தை தனது உழைப்பால் காப்பாற்றி வந்துள்ளார் அன்வர். மகள், மருமகன், இரு பேரக்குழந்தைகளுக்கு தள்ளு வண்டியில், ஜூஸ், குளிர்பானம் விற்று கிடைத்த காசில் காப்பாற்றி வந்துள்ளார். இப்போது அன்வரின் கால் மட்டும்தான் மிஞ்சியதால், நொடிந்து போயுள்ளார் குல்ஷன்.
திக்கற்ற இந்த குடும்பத்திற்கு இனி யார் கதி? விடை தெரியாத நாட்களுடன் நகருகிறது டெல்லி.