நிலக்கரி பற்றாக்குறை.. இருளில் மூழ்கப்போகிறதா டெல்லி? மெட்ரோ, மருத்துவமனைகள் நிலை? ஆம் ஆத்மி அலர்ட்
டெல்லி: நிலக்கரி பற்றாக்குறையால் தலைநகர் டெல்லி இருளில் மூழ்கும்; மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்படும்; மருத்துவமனைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் நிலைமை ஏற்படும் என ஆளும் ஆம் ஆத்மி அரசு எச்சரித்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் மின்பற்றாக்குறையை தடுக்கும் வகையில் போதுமான நிலக்கரி கையிருப்புக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும் எனவும் அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் நிலக்கரி பற்றாக்குறையால் பல மாநிலங்கள் மின் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்றன. வட மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் மின்சார தட்டுப்பாடு தொடர்ந்து நிலவுகிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் அம்மாநில மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நேற்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி மின்சார நிலவரம் தொடர்பாக சத்யேந்தர் ஜெயின் விவரித்தார்.

சத்யேந்தர் ஜெயின் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாத்ரி-2, உன் சச்சார் மின் நிலையங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமான நிறுவனங்கள், மெட்ரோ ரயில்கள், மருத்துவமனைகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் விநியோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். தற்போதைய மின் உற்பத்தியில் 25-30% தேவை உள்ளது. தற்போதைய மின் உற்பத்தி நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த இரு மின்நிலையங்களும்தான் மெட்ரோ ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு மின் விநியோகம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறு சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்திலும் இதேபோல் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஒருநாளைக்கு 6 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டும் வருகிறது. இதேபோல் வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் மின்சார பற்றாக்குறை, மின்வெட்டு நிலவுகிறது. இதேபோல் அனல் காற்று பல மாநிலங்களில் கடுமையாக வீசுவதும் மின்விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் சில நாட்கள் மட்டுமே மின்வெட்டு அமலில் இருந்தது. இது மிக கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஆனால் நடைமுறையில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் மின்சார பற்றாக்குறையும் அறிவிக்கப்படாத பல மின்வெட்டும் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications