அட கொடுமையே.. விமானம், ஏர்போர்ட், பராமரிப்பு பணி எல்லாவற்றிலும் விதிமீறல்.. டிஜிசிஏ ஆய்வில் அம்பலம்
டெல்லி: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தை தொடர்ந்து விமானப் பாதுகாப்பு குறித்து டிஜிசிஏ மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு முக்கிய விமான நிலையங்கள், அதன் பராமரிப்பு பணிகளில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
எந்தெந்த விமான நிறுவனங்கள், விமான நிலையங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது என்பது குறித்த விவரங்களை டிஜிசிஏ வெளியிடவில்லை. இந்த விதிமீறல்கள் மற்றும் குறைபாடுகளை ஏழு நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விமானம் தீயில் கருகிய நிலையில் அதில் பயணித்த 241 பேர், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் 30க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். மற்றவர்கள் அனைவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து விமானப் பாதுகாப்பு குறித்து டிஜிசிஏ மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு முக்கிய விமான நிலையங்கள், அதன் பராமரிப்பு பணிகளில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள விமானப் போக்குவரத்தில் உள்ள குறைபாடுகள், விதிமீறல்களை கண்டறிந்து அதனை சரிசெய்யும் நோக்கில் டிஜிசிஏ நாடு முழுவதும் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. டிஜிசிஏ இணை தலைமை இயக்குநர் தலைமையில் இரு குழுக்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டன.
மும்பை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்களின் செயல்பாடுகள், சாய்வுதளப் பாதுகாப்பு, அதன் இயக்கங்கள், விமானங்களின் தகுதி, தகவல் தொடர்பு, போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகள், விமான நிறுத்துமிடம், உபகரணங்கள், பராமரிப்பு இடங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டர்.
இந்த ஆய்வில், பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக டிஜிசிஏ அறிக்கை வெளியிட்டுள்ளது. விமானத்தின் ஓடுபாதையில் மங்கிய குறுக்கு கோடுகள், தேய்ந்து போன டயர்கள், விமான நிலைய சுற்றுப் பகுதி கட்டடங்கள் தொடா்பாக கணக்கெடுக்காமல் இருப்பது, தரவுகள் புதுப்பிக்கப்படாதது, வாகனங்களில் வேக கட்டுப்பாட்டுக் கருவி இல்லாதது, உயிர் காக்கும் கவச உடைகள் இல்லாதது போன்ற பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன.
சில விமானங்களில் குறைபாடுகள் சரிசெய்யப்படாமலேயே தொடர்ந்து இயக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த குறைபாடுகள் அனைத்தையும் 7 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும் என்று விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விஷயத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications