"ஜனநாயகத்தின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு தாக்குதல்.." திஷா ரவி கைதுக்கு கெஜ்ரிவால் கண்டனம்
டெல்லி: சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்லூரி மாணவியுமான திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளது, இதுவரை இல்லாத அளவுக்கான ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த, டுவிட்டர் தகவல்களை தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக வெளியிட்டு வந்துள்ளார் திஷா ரவி.

ஆனால் கிரெட்டா பதிவில் இருந்த டூல்கிட் தொடர்பாக விசாரணை நடத்திவரும் டெல்லி சைபர் கிரைம் போலீசார் பெங்களூரைச் சேர்ந்த மவுண்ட் கார்மெல் கல்லூரி மாணவியான, திஷா ரவியை திடீரென கைது செய்துள்ளனர்.
இதையடுத்து அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 5 நாட்கள் அவருக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவருக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்யவில்லை, கைது நடவடிக்கையில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது போன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இன்னொரு பக்கம், ஒரு டுவிட்டர் பதிவுக்காக இளம்பெண்ணை கைது செய்வது நியாயமற்றது, கருத்துரிமைக்கு எதிரானது என்ற விமர்சனங்களை அரசியல் கட்சியினர் முன்வைத்து வருகின்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் இன்று கூறுகையில், 21 வயதாகும் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளது இதுவரை இல்லாத அளவுக்கான ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல். நமது விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது குற்றச்செயல் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
திமுக லோக்சபா எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒரு ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்தது, அதுவும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்த பதிவை பகிர்ந்து குற்றம் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயக விரோதமானது. நான் திஷா ரவிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இது கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர் திஷா ரவி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து பதிவு செய்தார் என்பதற்காக அவரை அமித்ஷாவின் டெல்லி போலீசார் கைது செய்திருப்பதை, விடுதலை சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications