18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை
டெல்லி: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க கோரிக்கை வழக்கை தள்ளி வைக்க முடியாது என்று, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி தமிழக சட்டசபையில், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ. பன்னீர்செல்வம், பாண்டியராஜன், ஆர். நட்ராஜ், செம்மலை, சண்முகநாதன், மனோரஞ்சிதம், சரவணன், ஆறுக்குட்டி, சின்னராஜ், மாணிக்கம், மனோகரன் ஆகியே 11 பேரும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.
இருப்பினும் பிறகு இவ்விரு அணிகளும் இணைந்து கொண்டனர்.

ஹைகோர்ட்டில் வழக்கு
எனவே பன்னீர் செல்வம் அணி மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தரப்பில் சபாநாயகரை வலியுறுத்தவில்லை. ஆனால், அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததால், இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணியும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வெற்றிச்செல்வன், தங்க தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

சபாநாயகர் உத்தரவு உறுதி
வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 27ம் தேதி வழங்கிய தீர்ப்பில், 11 சட்டசபை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவிக்கப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஓபிஎஸ் கோரிக்கை
உயர் தீர்ப்புக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பிலும், தினகரன் ஆதரவாளர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் நாளை வர உள்ளது. ஆனால், வழக்கிற்கு இன்னும் தயாராகவில்லை என்று பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர், நீதிபதி ஏ.கே.சிக்ரி முன்னிலைியல் இன்று தெரிவித்ததோடு, வழக்கை இன்னொரு நாளைக்கு ஒத்தி வைக்க கோரினார். இதற்கு தினகரன் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

நாளையே விசாரணை
இதையடுத்து, பட்டியலிட்டபடி, நாளையே வழக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதி சிக்ரி தெரிவித்தார். வழக்கு விசாரணையின்போது வேண்டுமானால் உங்கள் கோரிக்கையை தெரிவியுங்கள் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications