கர்நாடக காங்கிரசின் பெரும் தலைவர் டி.கே.சிவகுமார் திகார் சிறையில் அடைப்பு.. பண மோசடி வழக்கில் அதிரடி
டெல்லி: பண மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார், டெல்லி திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
பண மோசடி வழக்கு தொடர்பாக சிவகுமாரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத்துறை அவரை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதையடுத்து வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை சிவகுமாருக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் சிவகுமார். சிகிச்சை முடிந்த நிலையில் அவர் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.
ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இருக்கக்கூடியது சிறை காம்பவுண்ட் உள்ளே உள்ள சிறைக்குதான் சிவகுமாரும் அனுப்பப்பட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிவகுமாருக்கு எதிராக பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. டெல்லியில் உள்ள சிவகுமார் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட 8.86 கோடி பணம் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
3ம் தேதி சிவகுமார் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாகி வருகிறார். அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ், தனது வாதத்தின் போது, சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 300க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை பராமரித்து வருவதாகவும், 200 கோடி ரூபாய்க்கும் மேலாக பண மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனிடையேதான், கடந்த 12ம் தேதி சிவகுமார் மகள் ஐஸ்வர்யா, அமலாக்கத்துறையின் முன்பு ஆஜராகி 7 மணிநேரம் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரது பெயரில் செயல்பட்டு வரக்கூடிய அறக்கட்டளை ஒன்றின் மூலமாகவும் பண மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்றது.
வழக்கு தொடர்பாக இன்று பெல்காம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி ஹெப்பால்கர் அமலாக்கத் துறையினரால் டெல்லியில் இன்று விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications