இன்னைக்கு இந்த ராஜா.. இங்க நிற்க காரணம் திராவிடம்.. நாடாளுமன்றத்தை அதிர வைத்த ஆ. ராசா எம்.பி
டெல்லி: திராவிடம் என்ன சாதித்தது என்பது குறித்து திமுக எம்பி ஆ ராசா நாடாளுமன்றத்தில் நேற்று பேசியதை திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். அப்படி என்ன பேசினார் என்பதை பார்ப்போம்..
லோக்சபாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா நேற்று (திங்கள்கிழமை) பேசினார். அப்போது அவர் கூறுகையில். "மத்தியில் ஆளும் பாஜக அரசு பாசிச கொள்கையை கடைபிடித்து வருகிறது. இந்துக்கள் அல்லாதவர்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் ஆகியோரை இந்த அரசு குறிவைக்கிறது. இது தான் பாசிசம்; இது தான் இனவாதம். பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோரை பாஜக அரசு ஒடுக்கப் பார்க்கிறது.

பாஜக அரசின் நடவடிக்கைகள் சர்வாதிகாரமாக உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வது இல்லை. குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலமாக சொல்கிறார்கள் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பிரதமர் மோடி 8 முறை பரப்புரைக்கு வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.
பாஜக ஆட்சியாளர்களுக்கு அவசரநிலை குறித்து பேச எந்த உரிமை கிடையாது. எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக இந்திரா காந்தி பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். முன்னாள் பிரதமர இந்திரா காந்தி தெரிவித்த மன்னிப்பை மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அதன்பிறகு மக்கள் அவரை மீண்டும் பிரதமராக்கி இருக்கிறார்கள்.
300க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம் என்று மோடி கூறினார். ஆனால் மக்கள் அதனை நிராகரித்துள்ளார்கள். 240 இடங்களை மட்டும் வைத்துள்ள பாஜக ஆட்சியை எப்படி பெரும்பான்மை அரசு என்று ஜனாதிபதி உரை மூலம் கூற முடியும்? பெரும்பான்மை அரசு என்று கூறுவதே பொய்யானது.
முகலாயர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்- அன்னியர்கள் எனில், ஆரியர்கள் மட்டும் யார்? அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள்தான்.. அன்னியர்கள். இதனால்தான் இந்திய நிலத்தை உரிமைக் கொண்டாடும் அருகதை கொண்டவர்கள் திராவிடர்கள் மட்டும்தான் என்றார் அம்பேத்கர்.
அதானி மோசடி விவகாரத்தில் பதில் சொல்ல பிரதமர் நரேந்திர மோடிக்கு முதுகெலும்பு இல்லை. எதிர்க்கட்சிகள் 15 நாட்கள் கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றம் வந்து எதிர்ப்பை தெரிவித்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை. முறைகேடுகளுக்கு பதில் அளிக்காமல் மௌனமாக இருக்கும் அரசு இதுவரை நான் பார்த்ததில்லை
நாங்கள் நரேந்திர மோடியைக்கூட கடவுளின் தூதராக ஏற்றுக்கொள்ள தயார். ஆனால், அவருக்கு அத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அப்படி எந்த தகுதியும் இல்லை என்பது தான் பிரச்சனை. அதனால்தான், அவரை அப்படி நம்ப முடியவில்லை.
நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன்.. என் குடும்பத்தில் அனைத்து சாதியினரும் உள்ளனர். இப்போது வரை நான் தலித் ஆகவே குறிப்பிடப்படுகிறேன். என் முன்னோர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள்.. அவர்களிடம் பணம் இல்லை.. அவர்கள் வறுமையில் தவித்தார்கள்.. அவர்கள் அப்பாவிகள்.. படிக்காதவர்கள்.. என் முன்னோர்கள் ஏழ்மையானவர்கள் மற்றும் படிக்காதவர்கள் ஆனால் அவர்களுடைய பேரனாகிய நான் , ராகுல் காந்தி பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறேன்.. பிரதமர் மோடி எதிர்த்து பேசிக்கொண்டிருக்கிறேன்..
என் மகள் லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.. இதெல்லாம் யார் செய்தது? எல்லாவற்றையும் செய்தது பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர்கள் ஆகியோர்களே காரணம்.. திராவிட சித்தாந்தத்ததால் இது நடந்தது.. திராவிட கொள்கைகளை நீங்கள் ஏற்க வேண்டும்." இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications