கோழிப்பண்ணைத் தொழில் பாதிக்காது! திமுக எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் திட்டவட்டம்!
டெல்லி: கோழிப் பண்ணையாளர்கள் நலன் பாதிக்கும் வகையில் எந்த சட்டத்திருத்தமும் கொண்டு வரப்படாது என மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஸ்ரீ புருஷோத்தம் ரூபாலா உறுதியளித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்காலக் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கால்நடை பராமரிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி., இராஜேஸ்குமார், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு மசோதா 2022 கீழ் கோழிகளைச் சேர்க்கக்கூடாது எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், ஓமன், மாலத்தீவு, இந்தோனேசியா, வியட்நாம், பூட்டான், ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்து இருபதாயிரம் மெட்ரிக் டன் முட்டைகளையும், இறைச்சிகளையும் இந்தியா ஏற்றுமதி செய்வதாக புள்ளி விவரங்களை அடுக்கினார்.

கோழிப்பண்னைத் தொழில்
நாட்டிலேயே அதிக முட்டை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் வழங்கப்படுவதாகவும் திமுக எம்.பி.ராஜேஷ்குமார் கூறினார். மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 20 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாக பேசியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் உறுதி
விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு மசோதா 2022 ஆனது கோழிப்பண்ணையாளர்களின் கவலைகளைத் தீர்க்கத் தவறிவிட்டதாகவும் வளர்ப்புப் பறவைகளை விலங்குகளாகக் கருத முடியாது எனவும் வாதிட்டார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய கால்நடைத் துறை அமைச்சர் ஸ்ரீ புருஷோத்தம் ரூபாலா, கோழிப் பண்ணையாளர்கள் நலன் பாதிக்கப்படும் வகையில் மத்திய அரசு, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்ற உறுதியை அளித்தார்.

பொது முக்கியத்துவம்
மேலும் மாநில அரசுகள், கோழிப் பண்ணையாளர்கள், விவசாயிகள் என பல தரப்பட்டோரின் ஆலோசனைகளை பெற்ற பிறகு தான் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் எனக் கூறினார். திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை முன் வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications