30 மாணவர்களை பறிகொடுத்துவிட்டோம்! நீட் தேர்வில் விலக்கு தேவை! ராஜ்யசபாவில் ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்
டெல்லி: நீட் தேர்வால் தமிழகத்தில் 30 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஆவேசம் காட்டியிருக்கிறார்.
நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், நீட் விலக்கு மசோதாவை தமிழக சபாநாயகருக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ரவி.
இதனால் நீட் விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

நாடாளுமன்றம்
மாநில அரசுகளின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஓப்புதல் தருவதில்லை என்ற குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் முன் வைத்து பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட மசோதாவை 5 மாதங்களாக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை என சாடினார். இவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் நிராகரித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு
மருத்துவத்துறையை பொறுத்தவரை ஒரு காலத்தில் 95% பேர் உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்ததாகவும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழகம் முன்னெடுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். ஆர்.எஸ்.பாரதியை போலவே, அதிமுக எம்.பி. தம்பிதுரையும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு தர வேண்டும் என வலியுறுத்தினார்.

கடும் சாடல்
மேலும் தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்று அலைகளை மத்திய அரசு மோசமாக கையாண்டதாகவும் மக்களை பாதுகாக்க தவறியதாகவும் குற்றஞ்சாட்டினார். முதல் அலை, இரண்டாம் அலை என கொரோனா தொற்று பரவிய போது அதிலிருந்து மத்திய அரசு பாடம் கற்கவில்லை என ஆர்.எஸ்.பாரதி கடுமையாக சாடினார்.
Recommended Video

திமுக எம்.பி.க்கள்
தமிழக எம்.பி.க்கள் குறிப்பாக திமுக எம்.பி.க்கள் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி பட்டியலிடுகின்றனர். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் விவகாரத்தில் திமுக எம்.பி.க்களுடன் அதிமுக எம்.பி.க்களான நவநீதகிருஷ்ணன், தம்பிதுரை, உள்ளிட்டோரும் இணைந்து செயல்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications