"யார் அந்த சூப்பர் சிஎம்.." தர்மேந்திர பிரதான் சொன்னதும் திமுக எம்பிக்கள் ஆவேசம்! உடனே போராட்டம்
டெல்லி: புதிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இப்போது பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை விவகாரம் குறித்துப் பேசும்போது கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய சில கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போது திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் புதிய கல்வி கொள்கை விவகாரத்தை திமுக எம்பிக்கள் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள்.

இன்று புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுக எம்பிக்கள் முதலில் சில கருத்துகளைத் தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதைக் கனிமொழி எம்பி சொல்ல வேண்டும். தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களைத் தமிழக அரசு தவறாக வழிநடத்துகிறது.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணைய விருப்பம் தெரிவித்தது, கடைசியில் யூடர்ன் அடித்துவிட்டது...கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட இருந்தது .. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டுவிட்டு சூப்பர் முதல்வரின் ஆலோசனையில் பின்வாங்கியது" என்று கூறியிருந்தார். இது நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
தர்மேந்திர பிரதானின் பேச்சைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடாளுமன்றம் சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில், அப்போதும் திமுக எம்பிக்கள் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications