கிரண்பேடி மீது நடவடிக்கை எடுங்கள்.. மக்களவையில் டிஆர் பாலு உள்பட திமுக எம்பிக்கள் ஆவேசம்
டெல்லி: கிரண்பேடிக்கு எதிராக மக்களவையில் திமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் புதுவை துணை நிலை ஆளுநர் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில் சென்னையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் ஆகியவற்றுடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும் காரணம் என கிரண்பேடி தெரிவித்திருந்தார்.
பொதுவாக முதல்வர் நாராயணசாமியுடன் எப்போதும் மல்லுக்கட்டி வரும் அவர் தற்போது சென்னை மக்கள் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திமுக நேற்று புதுவை ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது.
இந்த நிலையில் கிரண்பேடி விவகாரம் குறித்து அவையில் விவாதிக்குமாறு திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து கிரண்பேடி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் இருந்தது.
கிரண்பேடி குறித்து மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு பேசிய போது கூச்சல் குழப்பம் எழுப்பிய பாஜக எம்பிக்களிடம் ஆவேசம் காட்டினார் பாலு. இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 37 திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் மக்களவையில் தங்களது வாதங்கள் மூலம் டெல்லியையே கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications