தலைவரையே கூப்பிடல.. நாங்க மட்டும் எதுக்கு? பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் திமுக எம்பிக்கள்!
Recommended Video
டெல்லி: ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காததை தொடர்ந்து திமுக எம்பிக்கள் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி இன்று மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் தயார் நிலையில் உள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

அண்டை நாடுகளின் தலைவர்கள்
பாகிஸ்தானை தவிர இலங்கை, பங்களாதேஷ், பூடான், கிர்கிஸ்தான், தாய்லாந்து, ஈரான், மியான்மர் உளிளட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.மோடியின் பதவியேற்பு விழாவில், புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

திரை நட்சத்திரங்கள்
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைத்துறை நட்சத்திரங்களும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.

கமலுக்கு அழைப்பில்லை
அதேநேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. தேர்தல் பிரச்சாரத்தின் போது இரு தலைவர்களும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான தகவலை அரசியல் நாகரிகமாக பார்த்தனர் அரசியல் விமர்சகர்கள்.
ஆனால் கமலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் தெரிவித்தார்.

ஆந்திரா செல்லும் ஸ்டாலின்
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான டிஆர் பாலு தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காததை தொடர்ந்து திமுக எம்பிக்கள் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.

அதிக எம்பிக்கள் கொண்ட கட்சி
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 37 எம்பிக்களை பெற்றது. அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஒரே ஒரு எம்பி மட்டுமே கிடைத்தது. தமிழகத்தில் அதிக எம்பிக்களை கொண்ட ஒரு கட்சியின் தலைவர், மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த ஒரு கட்சியின் தலைவரை பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்காமல் இருப்பது பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications