50% இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்குக.. திமுகவின் சமூக நீதி கூட்டமைப்பு மாநாடு தீர்மானம்!
டெல்லி: நாட்டில் நடைமுறையில் 50 விழுக்காடு என்றுள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும் என திமுகவின் அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் திமுகவின் அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் 2-வது மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கான நியமனங்களில் அட்டவணை சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், ஓ.பி.சிக்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை கட்டாயமாக்குவதற்கு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும்.
- பதவி உயர்வு மற்றும் பணிமூப்பு நிர்ணயம் ஆகியவற்றில் OBC-களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
- 2015-இல் சேகரிக்கப்பட்ட சமூகப் பொருளாதார சாதி கணக்கெடுப்புத் தரவை ஒன்றிய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
- SC/ST/OBC-களுக்கான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் மற்றும் இடஒதுக்கீடுகளை ஆராய வேண்டும்.
- அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் தரப்படும் இடஒதுக்கீட்டை தனியார் வேலைவாய்ப்பிலும் பின்பற்ற வேண்டும்.
- மத்திய பல்கலைக்கழகங்கள், I.I.T-கள் , I.I.M-களில் OBC, SC & ST சமூகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களை விகிதாசார முறையில் நியமனம் செய்ய வேண்டும்.

- I.I.T, I.I.M மற்றும் I.I.S.C போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கைகளில் ஓ.பி.சி, எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்களுக்கு விகிதாசாரப்படி உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- SC/ST/OBC ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சமூகநீதிக் குழு இருக்க வேண்டும்.
- 50 விழுக்காடு என்றுள்ள இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டில் உள்ளது போல், ஒன்றிய அளவில், ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்திட, அகில இந்திய அளவில் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை நியமிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications