Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாணவர் சங்கம் டூ தேசிய தலைவர்! எமெர்ஜென்சியை எதிர்த்து ஜேஎன்யுவில் களமாடிய சீதாராம் யெச்சூரி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று காலமானார். மாணவர் பருவத்திலிருந்து இடதுசாரி தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பயணித்திருந்தார். இன்று அவர் உயிரிழந்த நிலையில், எமெர்ஜென்சிக்கு எதிராக ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் அவர் நடத்திய போராட்டம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.

யெச்சூரி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், பிறந்தது சென்னையில்தான். பள்ளிப்படிப்பை காக்கிநாடாவில் முடித்திருந்தார். அப்போது நடந்த தெலங்கானா போராட்டம் இவரை இரண்டு வழிகளில் பாதித்திருந்தது. ஒன்று இவர் ஆந்திராவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இவரது தாய் அரசு அதிகாரி என்பதால், டெல்லியில் உயர் கல்வியை தொடர வாய்ப்பு அமைந்தது. ஆனால், இரண்டாவது விஷயம்தான் முக்கியமானது. அதாவது, தெலங்கானா போராட்டம் இவரை அரசியல் சிந்தனையை நோக்கி நகர்த்தியது.

sitaram yechury cpim

11 மற்றும் 12ம் வகுப்பை டெல்லியில் ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இவரது பெற்றோர் படித்தவர்கள் என்பதால், கற்றலுக்கான வாய்ப்பு இயல்பிலேயே இருந்தது. எனவே இவர் சிபிஎஸ்சி உயர்நிலைத் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் ரேங்க் பெற்றார். அதன் பின்னர், டெல்லிலேயே 3 ஆண்டுகள் பிஏ பொருளாதாரம் பயின்றார். பின்னர், ஜேஎன்யுவில் இவருக்கு எம்ஏ பொருளாதாரம் பயில வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு இவரது எதிர்காலத்தையே மாற்றியது.

பள்ளி காலத்தில் எந்த தெலங்கானா போராட்டம் இவரை பாதித்திருந்ததோ, அந்த பாதிப்பை ஜேஎன்யு மேலும் தீவிரமாக்கியது. தெலங்கானா போராட்ட வரலாற்றை ஜேஎன்யு காலத்தில் படித்தார். அப்போதுதான் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. மத்திய அரசை விமர்சிப்பர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு குறித்து 'உம்' என்று சொன்னால் கூட சிறை என்கிற சூழல் இருந்தது. ஆனால், யெச்சூரி இதற்கு பயப்படவில்லை. அவசரநிலையை கடுமையாக எதிர்த்தார்.

இந்தியாவின் மிகப்பிரபலமான அரசியல் தலைவர்களை ஜேஎன்யுதான் உருவாக்கியிருக்கிறது. அதில் யெச்சூரியும் ஒருவர். இடதுசாரி மாணவர் சங்கமான, இந்திய மாணவர் சங்கத்தில் (SFI) தன்னை இணைத்துக்கொண்டார் யெச்சூரி. ஒரு மாணவனுக்கு கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அந்த கல்வியை சமூகத்திற்காக பயன்படுத்துவதும் முக்கியம் என்பதை SFI அவருக்கு கற்று கொடுத்தது. எமெர்ஜென்சியை விமர்சித்ததற்காக அவர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது.

இருப்பினும் அவர் தனது விமர்சனங்களிலிருந்து பின்வாங்கவில்லை. ஒரு கட்டத்தில் யெச்சூரியும், பிரகாஷ் காரத்தும் சேர்ந்து ஜேஎன்யு முழுவதையும் இடதுசாரி கோட்டையாக மாற்றினார்கள். குறிப்பாக ஜேஎன்யுவில் நடந்த ஒரு கூட்டத்தில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பங்கேற்றிருந்தார். அவர் முன்னிலையில் மாணவர் சங்கத்தின் தலைவராக, எமெர்ஜென்சியை எதிர்த்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை யெச்சூரி வாசித்தார். இது இன்றுவரை மிகப்பெரும் அரசியல் வரலாறாக பார்க்கப்படுகிறது.

ஜேஎன்யுவில்தான் யெச்சூரிக்கு சிபிஎம் தொடர்பு கிடைக்கிறது. மேலைநாடுகளின் இடதுசாரி சித்தாந்தத்தை அப்படியே எடுத்துக்கொள்ளாமல், இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு மாற்றி பொருத்திப்பார்த்தார். இதன் மூலம், இதற்கு முன்னர் இடதுசாரி தலைவர்கள் உயர்த்தி பிடித்த இயக்கத்தை மேலும் ஓரடி முன்னோக்கி நகர்த்தினார் யெச்சூரி.

என்னதான் கல்வியில் ஜாம்பவானாக இருந்தாலும், அதை வைத்து அரசு உயரதிகாரியாக மாறி குடும்பம், பிள்ளைகள் என தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கல்வியையும், அதன் மூலம் பயின்ற அரசியலையும் சமூக மாற்றத்திற்காக பயன்படுத்தினார் யெச்சூரி. இன்றளவும், சமகால தேசிய அரசியல் தலைவர்கள் மத்தியில் யெச்சூரிக்கு என தனி மதிப்பு இருக்கிறது. இது அவருக்கனது அல்ல.. அவர் முன்னெடுத்த அரசியலுக்கானது என மெய்சிலிர்க்கிறார்கள் இடதுசாரி செயற்பாட்டாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+