மசோதாக்களுக்கு ஒப்புதல் தராத 'பாக்கெட் வீட்டோ' அதிகாரம் ஆளுநருக்கு இல்லை:தமிழ்நாடு அரசு 'தெறி' வாதம்
டெல்லி: சட்டசபையில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருக்கும் 'பாக்கெட் வீட்டோ' அதிகாரம் என்பது ஆளுநருக்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மசோதாக்கள், கோப்புகள் மீது ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக் கோரியது தமிழ்நாடு அரசு.

திருப்பி அனுப்பிய ஆளுநர்: தமிழ்நாடு அ ரசின் மனுவை உச்சநீதிமன்றம் கடந்த 10-ந் தேதி விசாரித்து, மசோதாக்கள்- கோப்புகள் மீது விரைவாக முடிவெடுக்க உத்தரவிட்டது. இதன்பின்னர் திடீரென நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை தமிழ்நாடு சட்டசபைக்கு திருப்பி அனுப்பியது ஆளுநர் மாளிகை. இந்த 10 மசோதாக்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
3 ஆண்டுகளாக என்ன செய்தார் ஆளுநர்?: இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, மசோதாக்களுக்கு ஒப்புதல்- கைதிகள் விடுதலை உட்பட 4 விவகாரங்களுக்கு ஆளுநர் தரப்பில் பதில் தரப்பட்டுள்ளது என்றார். அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார். நவம்பர் 10-ந் தேதி உத்தரவிட்ட பின்னர் நவம்பர் 13-ந் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பி இருக்கிறாரே என கேள்வி எழுப்பினர். மேலும் ஆளுநரால் மசோதாக்களை நிறுத்தி வைக்க முடியாது; சட்டசபையில் மீண்டும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டமாக கூறினார்.
பாக்கெட் வீட்டோ அதிகாரம் இல்லை: இந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்குவதாகும். 2-வது முறையாக மசோதாக்களை அனுப்பினால் இனி ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்ப முடியாது. ஒப்புதல் தந்தாக வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருக்க ஆளுநருக்கு 'பாக்கெட் வீட்டோ' அதிகாரம் என்பது எதுவும் இல்லை. அமைச்சரவை ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றார். இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications