இரட்டை இலை சின்னம் கேட்டு டிடிவி. தினகரன் மேல்முறையீடு... உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டெல்லி: இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ஓபிஎஸ் - இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருந்தது தேர்தல் ஆணையம். இந்த உத்தரவை கடந்த மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது .
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. இருப்பினும் இரட்டை இலை சின்னத்துக்கு இரண்டு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

தேர்தல் ஆணையம்
இருதரப்பிடமும் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பிறகு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் - இபிஎஸ் அணிக்கு ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், சசிகலாவும் மேல்முறையீடு செய்தனர்.

மனுக்கள் தள்ளுபடி
இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கி தீர்ப்பளித்தனர். அத்துடன் டிடிவி தினகரன், சசிகலா தரப்பில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்..

தேர்தல் ஆணையம் மறுப்பு
இதற்கிடையே, ஆர் கே நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் நின்று தினகரன் வெற்றி பெற்றிருந்த நிலையில், அந்த சின்னத்தையும் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேல்முறையீடு
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், குக்கர் சின்னமும் இல்லாமல் இரட்டை இலை சின்னமும் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால். இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்குமாறு டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications