சம்பவம் செய்த தேஜஸ்.. 50,000 அடி உயரத்தில் நடந்த மேஜிக்! DRDO புது சாதனை
டெல்லி: தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர் காக்கும் அமைப்பு முறை 50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) புது சாதனையை படைத்திருக்கிறது.
இனி வரும் நாட்களில் மிக்-29 உள்ளிட்ட போர் விமானங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு, புதிய தொழில்நுட்பம் அதில் சேர்க்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

போர் விமானங்கள் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டவை. சாதாரணமாக, 15 கி.மீ உயரத்தில் பறக்கும். இந்த உயரத்தில் பறக்கும்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். எனவே மூச்சு திணறல் அதிகமாக பைலட் மயங்க வாய்ப்பு இருக்கிறது. இது அவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவேதான் தேஜஸ் விமானங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன. சிலிண்டரில் இருக்கும் ஆக்ஸிஜன் விமானிக்கு போதுமானதாக இருக்கும்.
ஆனால், தேஜஸ் விமானம் சுமார் 3,200 கி.மீ வரை நிற்காமல் பறக்கும் திறன்கொண்டது. சிக்கல் என்னவெனில், ஆக்ஸிஜன் சிலிண்டர் அதிகபட்சமாக 2-3 மணி நேரம் வரை மட்டுமே ஆக்ஸிஜனை சப்ளை செய்யும். இதனால் விமானியால் நீண்ட தூரம் பறக்க முடியாது. இடையில் ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டால் உடனடியாக விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது ஒரு தொழில்நுட்ப சிக்கல். எனவே, இதை மாற்றியமைக்க சர்வதேச நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து கண்டுபிடித்த ஐடியாதான் OBOGS (Onboard Oxygen Generation System).
விமானம் பறக்கும்போது காற்றை கணிசமான அளவுக்கு இந்த டெக்னாலஜி உள்ளே எடுத்துக்கொள்கிறது. வழக்கமாக காற்றில் 78% நைட்ரஜனும், 21% ஆக்ஸிஜனும் இருக்கும். நைட்ரஜனை நம்மால் சுவாசிக்க முடியாது. எனவே மீதம் இருக்கும் ஆக்ஸிஜனை மட்டும் OBOGS தனியாக பிரித்து எடுக்கிறது. இதற்கு மூலக்கூறு சல்லடை வடிக்கட்டி முறை (molecular sieve filter) பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் பிரித்து எடுக்கப்பட்ட ஆக்ஸிஜனை அப்படியே விமானிக்கு கொடுக்க முடியாது. அதை தூய்மைப்படுத்த வேண்டும். இதையெல்லாம் செய்யும் டெக்னாலஜிக்கு பெயர்தான் OBOGS.
ஆனால் மற்ற நாடுகள் இந்த டெக்னாலஜியை பகிர்ந்துக்கொள்ளாது. எனவே, நமது நாட்டின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தேஜஸ் விமானத்திற்கு ஏற்ப இந்த டெக்னாலஜியை சிறப்பாக வடிவமைத்திருக்கிறது. இதற்கான பரிசோதனைதான் நேற்று நடைபெற்றது. சுமார் 50,000 அடி, அதாவது 15.2 கி.மீ உயரத்தில் இந்த டெக்னாலஜி பரிசோதித்து பார்க்கப்பட்டிருக்கிறது. பரிசோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இது DRDO செய்த மிகப்பெரிய சாதனை.
இனி வரும் நாட்களில் மிக்-29 உள்ளிட்ட விமானங்களிலும் இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமந்துக்கொண்டு செல்லும் வேலை மிச்சம். சிலிண்டர் இல்லையெனில் எடையும் குறையும். எடை குறைந்தால் விமானத்தின் வேகம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications