மோடிக்கு துபாய் சிறுவன் அனுப்பிய குடியரசு தின பரிசு
புதுடெல்லி : துபாயில் வசிக்கும் 14 வயது இந்திய வம்சாவளி சிறுவன், இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடிக்கு ஸ்டென்சில் கொண்டு உருவாக்கப்பட்ட ஓவியத்தை பரிசாக அனுப்பி உள்ளான். இந்த ஓவியம் 6 அடுக்கு களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
மூன்று நாள் பயணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரனிடம் இந்த ஓவியம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.
அது என்ன ஸ்டென்சில் ஓவியம் :
ஸ்டென்சில் என்பது காகிதம் அல்லது பிளாஸ்டிக் துண்டுகளை பயன்படுத்தி, கிராபிக்ஸ் போன்ற அமைப்பை உருவாக்கும் வடிவம். இந்த முறையை பயன்படுத்தி 6 அடுக்குகளில் பிரமதர் மோடியின் உருவத்தை சரண் சசிக்குமார் என்ற அந்த சிறுவன் உருவாக்கி உள்ளான்.
யார் இந்த சரண் சசிகுமார் :
துபாயில் உள்ள நியூ இந்தியன் மாடல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சரண் சசிகுமார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சரண், 2020 ம் ஆண்டு அக்டோபர் மாதம், 5 அடுக்குகளில் மோடியின் ஸ்டென்சில் ஓவியத்தை உருவாக்கி இருந்தான். ஆசியா சாதனை புத்தகத்திடம் இருந்து கிராண்ட் மாஸ்டர் சான்றிதழ் பெற்றவன். ஸ்டென்சில் முறை ஓவியங்களை உருவாக்கியதற்காக இந்திய சாதனை புத்தகத்திடம் இருந்தும் சான்றிதழ் பெற்றுள்ளான்.
ஓவியத்தின் சிறப்பு :
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் லோகோ பொறித்த தொப்பியை அணிந்து, சல்யூட் செய்த மோடியின் உருவத்தை சரண் வடிவமைத்துள்ளான். இந்த ஓவியம் 90 செ.மீ., அகலமும், 60 செ.மீ., உயரமும் கொண்டது. இந்த ஓவியத்தை வடிவமைக்க சரண் 6 மணி நேரங்களை எடுத்துக் கொண்டுள்ளான். 6 வண்ணங்களை பயன்படுத்தி, 6
அடுக்குகளில் இதனை உருவாக்கி உள்ளான். கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும், ஐக்கிய அரபு தலைவர்கள் உள்ளிட்ட 92 ஓவியங்களை இவன் உருவாக்கி உள்ளான்.
|
அமைச்சரின் பாராட்டு :
இந்த ஓவியத்தை பெற்றுக் கொண்ட மத்திய இணை அமைச்சர் முரளீதரன், தனது டுவிட்டர் பக்கத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த இளம் திறமையாளரான சரண் சசிகுமாரை துபாயில் சந்தித்தது மகிழ்ச்சி.
இந்த அழகிய உருவப் படத்தை அவன் பரிசளித்துள்ளான். நமது பிரதமர் மோடியின் 6 அடுக்கு ஸ்டென்சில் ஓவியத்தை அவன் குடியரசு தின பரிசாக அளித்துள்ளான். உண்மையில் எழுச்சியூட்டுகிறது. அவனுக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.