இரவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்! குலுங்கிய மணிப்பூர்.. கலங்கிய மக்கள்! ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
இம்பால்: மணிப்பூரில் திங்கள் கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை
வடகிழக்கு மாநிலங்களில் அண்மைக்காலமாகவே மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அடுத்தடுத்து ஏற்படும் இத்தகைய நிலநடுக்கங்கள் மக்களுக்கு சற்று கொடுத்துள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் நேற்று திங்கள் கிழமை இரவு 11.11 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தால் மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் குலுங்கியது. இதனால் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் திடுக்கிட்டு எழுந்தனர். சில இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து நின்றதையும் காண முடிந்தது. 20 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக திங்கள் கிழமை அதிகாலை வங்காள விரிகுடா கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அடுத்த சில மணி நேரங்களில் மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது உலக அளவில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத்தகைய சூழலில் தான் மணிப்பூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது மக்களுக்கு கூடுதல் அச்சத்தை கொடுப்பதாக அமைந்து விட்டது.












Click it and Unblock the Notifications