டெல்லி: மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா தேர்தல் பிரசாரத்துக்கு தடை
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோர் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான பிரசாரம் அனல் பறக்கிறது. மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பிக்கள் களமிறங்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.
டெல்லியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் போராடும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டக்காரர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பேசினார். அத்துடன் கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டக்காரர்களை சுட்டுக் கொல்வோம் என்கிற முழக்கத்தை எழுப்பவும் கூறினார் அனுராக் தாக்கூர்.
இதேபோல் பாஜக எம்.பி.யான பர்வேஷ் வர்மா, டெல்லியில் பாஜக ஆட்சியில் அமைந்தால் 1 மாதத்தில் தமது தொகுதியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட மசூதிகளை இடித்து தள்ளுவோம் என்றார்.
இருவரது பேச்சுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஆம் ஆத்மி கட்சி புகார் அளித்தது. இப்புகாரைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் 72 மணிநேரமும் பர்வேஷ் வர்மா 96 மணிநேரமும் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.