பீகாரில் வாக்கு திருட்டு பஞ்சாயத்தை தூக்கிட்டு வர வேண்டாம்! ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் மெசேஜ்!
டெல்லி: வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை அடுக்கி வருகிறார். இந்நிலையில் பீகாரில் வாக்கு திருட்டு சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், "படிவம் 17A மற்றும் இதர வாக்குப்பதிவு ஆவணங்களை, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய ஆய்வுக்கு உட்படுத்துவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. ஆய்வின் தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து அனைத்து வேட்பாளர்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த 121 சட்டமன்றத் தொகுதிகளிலும், 121 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் (RO) மற்றும் 121 பொதுப் பார்வையாளர்கள் (GO) முன்னிலையில் ஆவணங்களின் ஆய்வு சீராக நடைபெற்றது. சுமார் 455 வேட்பாளர்கள்/முகவர்களும் ஆய்வுச் செயல்பாட்டில் பங்கேற்றனர்.
ஆய்வுக்குப் பிறகு, எந்தவொரு வாக்குச் சாவடியிலும் எந்த முரண்பாடும்/முறைகேடும் கண்டறியப்படவில்லை, மேலும் பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டத்தில் மறுவாக்குப்பதிவுக்குப் பரிந்துரைக்கப்படவில்லை. முழுச் செயல்முறையும் வீடியோ பதிவு செய்யப்பட்டது மற்றும் ஆய்வுக்குப் பிறகு, படிவம் 17A மற்றும் தொடர்புடைய பொருட்கள் RO-வின் முத்திரையுடன் மீண்டும் சீலிடப்பட்டன" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடந்ததாகவும், இந்த திருட்டின் மூலம் ஹரியானாவில் ஆட்சியையே பாஜக கைப்பற்றியது என்றும் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் இருந்தனர், வாக்காளர் லிஸ்ட்டில் பிரேசில் மாடலின் பெயர் இடம்பெற்றிருந்தது, அவர் 22 முறை 10 வாக்குச்சாவடிகளில் வாக்களித்தார் என்றெல்லாம் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டையடுத்து பீகாரிலும் வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
இதனை மறுக்கும் விதமாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழாமல் இருக்கும் விதமாகவும் தற்போது தேர்தல் ஆணையம் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications