உடல்நிலை நல்லா இல்லைனா பிரசாரம் மட்டும் எப்படி செய்றாரு? கெஜ்ரிவால் ஜாமீன் மனு.. பாயிண்டை பிடித்த ED
டெல்லி: கெஜ்ரிவால் தனது ஜாமீனை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்க துறை சார்பில் சில முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
டெல்லியில் கடந்த 2022 இறுதியில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கை அங்கு ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மிக்கு பெரிய சிக்கலாக மாறியது. இந்த விவகாரத்தில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறுதியாக கெஜ்ரிவாலும் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். பல வாரங்கள் சிறையில் இருந்த அவருக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
மதுபானக் கொள்கை: இதற்கிடையே மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மனுவை அமலாக்கத் துறை கடுமையாக எதிர்த்துள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில், அதைக் குறிப்பிட்ட அமலாக்கத் துறை, இப்போது மட்டும் அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிப்பு அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்கவில்லை என்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
மதுபான கொள்கை விவகாரத்தில் கடந்த மார்ச் 21ஆம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார்.. பல வாரங்கள் சிறையில் இருந்த அவருக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரம் செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த இடைக்கால ஜாமீன் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அவர் ஜூன் 2ஆம் தேதி சரணடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
மனுத்தாக்கல்: இதற்கிடையே இடைக்கால ஜாமீனை ஒரு வாரம் நீட்டிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இதை அவசர மனுவாக விசாரிக்கக் கோரிக்கை விடுத்த போதும் அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்தச் சூழலில் அவர் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
பரபர வாதம்: இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத் துறை தரப்பில் சில முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "கெஜ்ரிவால் இப்போது பஞ்சாப்பில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது உடல்நிலை பிரச்சாரம் செய்வதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை.
அவர் தேர்தல் காலகட்டத்தில் கடுமையான பிரச்சாரத்தைச் செய்துள்ளார். ஆனால், இப்போது கடைசி நேரத்தில் ஜாமீன் வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த நடத்தையே அவரை ஜாமீனுக்கு தகுதி இல்லாத நபராக மாற்றுகிறது" என்று வாதங்களை முன்வைத்தார்.
உத்தரவு: அமலாக்கத் துறை வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், இந்த விகாரத்தில் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நாளை மறுநாள் அதாவது ஜூன் 1ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
ஒரு வாரம் ஜாமீன் கோரி மனு: மேலும், இந்த வழக்கமான ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டால், மருத்துவ காரணங்களுக்காக ஒரு வாரம் இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தனியாக இன்னொரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். சில மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் ஒரு வாரம் ஜாமீன் தேவை என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு குறித்தும் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு குறித்த விசாரணையை நாளை மறுநாள் அதாவது ஜூன் 1ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அன்றைய தினம் அவருக்கு ஜாமீன் கிடைக்கிறதா.. இல்லையா என்பது தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications