மகாராஷ்டிரா தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிக்கல்.. சரத் பவார் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீது அமலாக்க இயக்குநரகம் (இடி) பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி ஊழலின்கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஷரத் பவாரின் மருமகன் அஜித் பவார் உள்ளிட்ட மற்றும், பலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இன்னும் 6 மாதங்களுக்குள் மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
கூட்டுறவு கடன் மோசடி மற்றும் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான, சர்க்கரை ஆலைகளை மிக மிக குறைந்த விலையில் விற்பனை செய்த பண மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மோசடிகளின் மொத்த மதிப்பு ரூ.25,000 கோடியாகும். விற்பனை செய்யப்பட்ட கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலைகள் பலவும், நஷ்டத்தில் இயங்கியவைதான். ஆனால், அதன் இயக்குநர்களால் "ரிசர்வ் விலைக்குக் கீழே" அவை விற்கப்பட்டன. ஆலைகளை வாங்குபவர்களுக்கு லாபத்தை அளிக்கும் நோக்கத்தில் இப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சர்க்கரை ஆலைகளில் பலவற்றுடன் சரத் பவார் மற்றும் அவரது மருமகனின் தொடர்பை விசாரிக்க வாய்ப்புள்ளது.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சமீபத்தில் காங்கிரசுடன் கைகோர்த்தது. மகாராஷ்டிராவில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு முக்கிய எதிர்தரப்பு இந்த கூட்டணிதான். இதனிடையேதான் சரத் பவாரின் நெருங்கிய நண்பரும், முன்னாள் சிவில் விமானத்துறை அமைச்சருமான பிரபுல் படேல் ஏற்கனவே ஏர் இந்தியா ஊழலில் அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications