பிரதமர் மோடியுடன், ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.. தீவிர ஆலோசனை
டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் சேர்ந்து சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது அதிமுக சீனியர் தலைவர் மற்றும் ராஜ்யசபா எம்பி தம்பிதுரை உடன் இருந்தார்.
முன்னதாக, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆலோசனைகளை நடத்தியிருந்தனர். அங்கிருந்து நேரடியாக நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்று பிரதமர் அலுவலகத்தில் அவரை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.
வெள்ளை அறிக்கை.. பிடிஆர் சூசகம்.. பூனக்குட்டி வெளியே வரப்போகுது.. எடப்பாடி பழனிசாமிக்கு செக்!
சசிகலா விவகாரம்
காலை சுமார் 11.20 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள், உள்ளாட்சி தேர்தல், அரசியல் சூழ்நிலை குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவுக்கு சசிகலா உரிமை கொண்டாடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படதாக கூறப்படுகிறது.
அதிமுக கொடி
அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகத் தேர்தலுக்கு முன்பு அறிவித்த சசிகலா தற்போது அதிமுக கொடியுடன் காரில் அப்பல்லோ மருத்துவமனை வந்ததும், அதற்கு முன்பாக அதிமுக நிர்வாகிகள் பலருடன் போனில் ஆலோசிப்பதும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் மகன்
ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் பாஜகவை லோக்சபாவில் தீவிரமாக ஆதரித்து வருகிறார் என்ற போதிலும், பிரதமர் மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது, ரவீந்திரநாத் குமாருக்கு இடம் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
பால் காய்ச்சும் நிகழ்ச்சி
இந்த நிலையில், ரவீந்திரநாத் குமாருக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் டெல்லியில் தனி பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால், ரவீந்திரநாத் குமார் தனி பங்களாவில் இன்று பால்காய்ச்சுகிறார். இதில் ஓபிஎஸ் குடும்பத்தோடு பங்கேற்கிறார். இதற்குத்தான் அவர் டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் திடீரென எடப்பாடி பழனிச்சாமிக்கும் டெல்லி வருமாறு அழைப்பு வந்துள்ளது. எனவே அவர் நேற்று இரவு டெல்லி கிளம்பினார்.