பச்சைக் கொடி காட்டிய டெல்லி.. தமிழ்நாடு அரசு இல்லத்தை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி? ஏன் என்னாச்சு?
டெல்லி: டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு இல்லத்தை ஏன் புறக்கணித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜி20 உச்ச மாநாட்டை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக இந்தியா முழுவதும் 200 நகரங்களில் துணை மாநாடு நடத்தவும் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி , தஞ்சை, கோவை ஆகிய 4 இடங்களில் துணை மாநாடு நடத்துவதற்கு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஜி20 மாநாட்டுக்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது.

துணை மாநாடு
இந்த துணை மாநாடுகளையும் செப்டம்பர் மாதம் நடைபெறும் உச்சி மாநாட்டையும் நடத்துவது தொடர்பான முக்கிய ஆலோசனைகளையும் மாநில அரசின் ஒத்துழைப்பை கோரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின்
இந்த கூட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், டி.ஆர் பாலு, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கை
இந்த கூட்டத்தில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம், வர்த்தகம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியாவின் தலைமையில் ஜி 20 கூட்டமைப்பை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டம் நடந்தது ஒரு புறமிருக்க, மறுபுறம் அதிமுகவில் நடைபெறும் குளறுபடிகளுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என டெல்லி தலைமை ஏற்றதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

ஒற்றைத் தலைமை
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது டெல்லி தலைமைக்கு கோபம் இருந்ததாக சொல்லப்பட்ட போதிலும் தற்போது டெல்லியே இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியை அங்கீகரித்துவிட்டது. இதனால் மட்டற்ற மகிழ்ச்சியில் எடப்பாடி தரப்பு உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் கடந்த தேர்தலைபோல் 5 இடங்களை பாஜகவுக்கு வழங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் பாஜகவோ 40 -இல் 20 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டின் போது 20 தொகுதிகளை கேட்பதற்கு அதிமுக எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கக் கூடாது என்பதால் இது போல் டெல்லி தலைமை எடப்பாடி பழனிசாமியை குஷிப்படுத்தியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

விருந்தினர் மாளிகையில் தங்கவில்லை
இந்த நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி டெல்லி தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கவில்லை. அந்த விருந்தினர் மாளிகையில் முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்டோர் தங்குவதற்கு அறைகள் உள்ளன. அது போல் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அறை உள்ளது. எனினும் எடப்பாடி பழனிசாமி அங்கு தங்காமல் தனியார் விடுதியில் தங்கியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணமும் தெரியவில்லை. முதல்வர் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கியிருந்ததால் அங்கு தங்குவதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்தாரா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications