தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.. அமித் ஷாவிடம் புகார் சொன்னேன்: எடப்பாடி பேட்டி
டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசிய நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மட்டுமே பேசியதாகவும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளதையும், கஞ்சா விற்பனை அதிகரித்து இருப்பதையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன் என்றார்.
அதிமுகவின் அதிகார யுத்தம் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் மேலிடத்தின் ஆதரவு யாருக்கு என்பதில்தான் தற்போது பெரிய விவகாரமே எழுந்திருக்கிறது.
பாஜக தலைமையின் ஆதரவை பெற அதிமுகவின் அதிகாரத்தை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக முயன்று வருகின்றனர். அதே நேரத்தில் பாஜக தலைமை யாருக்கு ஆதரவாக இருக்கிறது என்பது இலைமறை காயாகவே இருக்கிறது.
புண்ணியம் தரும் புரட்டாசி..ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்..நாளை 6 மணி நேரம் தரிசனம் ரத்து
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் டெல்லி பயணம் பெரும் முக்கியத்துவத்தை பெற்றது. நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்ற அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அமித் ஷாவுடன் சந்திப்பு
இந்த சந்திப்பின்போது தமிழக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி சிவி சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர். அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும், அதிமுகவுக்கு எதிராக ஓபிஎஸ் செய்து வரும் இடையூறுகள் குறித்தும் விலக்கியதாக கூறப்பட்டது. ஆனால் இதை முற்றிலும் மறுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லை எனக் கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு
உள்துறை அமைச்சக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது" என்றார். மேலும்,"கஞ்சா விற்பனை அதிகரித்து இருப்பதையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன். தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆனால் திமுக அரசு கலக்சன், கரப்சன், கமிஷன் என தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் நடப்பதை பற்றியெல்லாம் முதல்வருக்கு கவலையில்லை" என கூறினார்.
உண்மை என்ன?
அதிமுகவில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து பேசியதாக இபிஎஸ் கூறியிருப்பது முரண்பாடாக இருக்கிறது. செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து மட்டுமே இபிஎஸ் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. உட்கட்சி மோதலை மறைக்க எடப்பாடி சட்டம் ஒழுங்கு குறித்து பேசியதாக திமுகவினர் கூறுகின்றனர்.