5 மாநில சட்டசபை தேர்தல்கள்: நவ.7 முதல் நவ.30 வரை எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை!
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்கள் தொடங்கும் நவம்பர் 7-ந் தேதி முதல் தெலுங்கானா தேர்தல் நடைபெறும் நவம்பர் 30-ந் தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மிசோரம், தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7-ந் தேதி தொடங்குகிறது.

5 மாநில தேர்தல் தேதிகள்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, நவம்பர் 17
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7
மத்திய பிரதேசம் நவம்பர் 17
ராஜஸ்தான் நவம்பர் 25
தெலுங்கானா நவம்பர் 30 ஆகிய நாட்களில் வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து மாநில வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த 5 மாநில தேர்தல் மிகவும் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ம.பியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. மிசோரமில் பாஜக கூட்டணி கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெறுகிறது. தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ராஜஸ்தான், ம.பி. மாநிலங்களில் வெல்வோம் என்கிற நம்பிக்கை உள்ளது. தெலுங்கானா, மிசோரமில் களத்திலேயே பாஜக இல்லை. சத்தீஸ்கரில் காங்கிரஸ்தான் வெல்லும் என்கின்றன கருத்து கணிப்புகள். ராஜஸ்தான், ம.பி. மாநிலங்களிலும் கூட முரண்பாடான கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 5 மாநில தேர்தல்களில் நவம்பர் 7-ந் தேதி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குவதில் இருந்து நவம்பர் 30-ந் தேதி மாலை 6.30 மணிக்கு வாக்குப் பதிவுகள் முடியும் வரை அனைத்துவிதமான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அச்சு அல்லது காட்சி ஊடகங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நவம்பர் 7 முதல் நவம்பர் 30 வரை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications