லோக்சபா தேர்தலுடன் 7 மாநில சட்டசபை தேர்தல்? தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு
டெல்லி: லோக்சபா தேர்தலுடன், 7 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தலை நடத்த உள்ளது தலைமை தேர்தல் ஆணையம்.
ஆந்திரா, ஹரியானா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்தலை, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த 4 மாநிலங்களின் ஆயுட்காலம் அடுத்தாண்டு மே, ஜுன் மாதத்துடன் முடிகிறது. அதே நேரத்தில் இவ்வாண்டு, நவம்பரில் கலைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தலையும், லோக்சபா தேர்தலோடு, நடத்தி விடலாம் என்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநில தேர்தல்கள், கால அட்டவணைப்படி நடைபெறும் என்றும், பாஜக ஆளும் மாநிலங்களில் முன்னதாகவே தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தலை இன்னும் முன்னதாக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத்தேர்தலுடன் ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தலை நடத்தினால், 2019ம் ஆண்டு வேறு எந்த தேர்தலையும் நடத்த வேண்டிய தேவை இருக்காது என்று மற்றொரு தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே இந்த இரு மாநில சட்டசபைகள் கலைக்கப்பட்டால், பொதுத்தேர்தலுடன், மொத்தம் 7 மாநில சட்டசபைகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்படும். மொத்தத்தில் லோக்சபா பொதுத்தேர்தலுடன், மற்றொரு மினி பொதுத்தேர்தல் நடைபெறும் என்பது தான் தற்போதுள்ள நிலவரம்.