"ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமே இல்லை! ஆனால்.." தேர்தல் ஆணையம் தந்த திடீர் விளக்கம்
டெல்லி: வாக்கு திருட்டு தொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கர்நாடகாவில் இதுபோலத் தான் ஒரு தொகுதியில் வாக்குகள் திருடப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டிய நிலையில், இது குறித்துத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், அவை தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளது.
காங்கிரஸின் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் வாக்கு திருட்டு தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். காங்கிரஸ் வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்படுவதாகவும் வாக்கு திருட்டில் ஈடுபடுவோரைத் தலைமைத் தேர்தல் ஆணையரே பாதுகாப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், கர்நாடகாவில் உள்ள ஆலாந்து என்ற தொகுதியில் பல வாக்காளர்கள் இதுபோல நீக்கப்பட்டுள்ளதாகவும் சாப்ட்வேர் மூலமே இதுபோல வாக்காளர்கள் நீக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்துத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
ராகுலின் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள தேர்தல் ஆணையம், இந்தக் குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாக வாக்காளர் பட்டியலில் இருந்து எந்தவொரு பெயரையும் நீக்க முடியாது என்பதையும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கர்நாடகாவின் ஆலாந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நீக்குவதற்குச் சில முயற்சிகள் நடந்ததுள்ளது உண்மை தான் என்றாலும் அது தோல்வியிலேயே முடிந்ததாகவும் வாக்காளர்கள் யாரும் நீக்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையமே புகாரளித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications