நான் கொஞ்சம் பிசி.. இப்போதைக்கு நோ! பிரதமர் மோடி சந்திப்பை ஒத்தி வைத்த எலான் மஸ்க்! இதுதான் காரணமா?
டெல்லி: உலக அளவில் மிகப் பெரிய பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கின் இந்தியப் பயணத்தை திடீரென ஒத்தி வைத்திருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இம்மாத இறுதியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவிருந்த நிலையில் எலான் பயணத்தை ரத்து செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது..
உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் விண்வெளி ஆராய்ச்சியில் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். இணைய சேவையை வழங்கும் செயற்கைக்கோள்களை செலுத்துவது மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் ஆராய்ச்சியில் அவர் தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

பலமுறை தோல்வி கண்டாலும் தற்போது மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனையில் எலான் மஸ்க் வெற்றி பெற்று வருகிறார். அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மூலம் இதுவரை நூற்றுக்கணக்கான செயற்கைகோள்களை ஏவியுள்ளது.
எலான் மஸ்க்: அதுமட்டுமல்லாமல் டெஸ்லா நிறுவனத்தின் மூலமாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரம் காட்டி வரும் எலான் மஸ்க் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் பல நிறுவனங்கள் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் தடம் பதித்திருக்கும் நிலையில் அதிக வரி உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக டெஸ்லா கார் உற்பத்தியை இந்தியாவில் தொடங்குவது சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச அளவில் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் டெஸ்லாவின் நிறுவனத் தலைவரான எலான் மஸ்க் ஏப்ரல் 21ஆம் தேதி இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தியாவில் முதலீடு: ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து எலான் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதற்காக எலான் மஸ்க் தொடர்ந்து முனைப்பு காட்டி வந்த நிலையில் அந்த நிறுவனத்தின் நிர்வாக குழுவும் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எலான் மஸ்கின் இந்திய பயணத்தின் போது மின்சார வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்வார் எனவும் தொழில்துறையினரிடையே பெருத்த எதிர்பார்ப்பு நிலவியது.
டெஸ்லா நிறுவனம்: டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி மையம் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியாவில் தொடங்க இருப்பதாகவும் அதற்காகவே இந்த சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக உற்பத்தி மையங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கான கார்களின் விலையை குறைத்திருந்தது மத்திய அரசு. டெஸ்லா மட்டுமல்லாது அதிக வேகத்தில் இணைய சேவைகளை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இந்தியாவில் எலான் மாஸ்க் தொடங்குவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
பயணம் ஒத்திவைப்பு: மேலும் கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பை எதிர்நோக்கி உள்ளேன் என எலான் பதிவிட்டிருந்த நிலையில் அவரது இந்தியப் பயணம் நிச்சயம் இருக்கும் எனவே எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனது இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறி இருக்கிறார் எலான் மஸ்க்.
என்ன காரணம்?: "துரதிஷ்டவசமாக மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் காரணமாக இந்திய பயணத்தை தாமதப்படுத்த வேண்டியதாகி விட்டது ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தருவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என எலான் பதிவிட்டுள்ளார். கடந்த முறை எக்ஸில் பதிவிட்ட போது பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என பதிவிட்டு இருந்த எலான் மஸ்க் தற்போது இந்திய பயணம் என குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தியாவில் பயணம் மேற்கொள்வதே சிறப்பானதாக இருக்கும் என எலான் கருதியாகவும், அதன் காரணமாகவே தற்போது பயணத்தை அவர் ஒத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications