அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இறுகும் பிடி... அமலாக்கத்துறை 8வது முறையாக சம்மன்.. என்ன செய்யப்போகிறார்?
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இந்த புகாரை டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் சில அரசு அதிகாரிகள் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் சக்சேனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். இதன்படி சிசோடியா தொடர்புடைய இடங்களில் சிபிஐ ரெய்டு மேற்கொண்டு அவரை கைது செய்திருந்தது. அதேபோல இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று கடந்த 7 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், வரும் மார்ச் 4ம் தேதி ஆஜராக வேண்டும் என்று 8வது முறையும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தலில், தேர்தல் அதிகாரியின் முறைகேட்டால்தான் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும், எனவே இந்த வெற்றி செல்லாது என்று கூறி ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. மறுபுறம், உத்தரப் பிரதேசம் தொடங்கி குஜராத் வரை வட இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஆத் ஆத்மி - காங்கிரஸ் இடைய தொகுதி உடன்பாடு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இவை அனைத்தும் பாஜகவுக்கு சவாலாக பார்க்கப்படும் நிலையில், தற்போது கெஜ்ரிவாலுக்கு எதிராக சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications