10% இடஒதுக்கீடு.. SC/ ST/ OBC பிரிவை நீக்கியது தவறு.. தலைமை நீதிபதி லலித், நீதிபதி பாட் தீர்ப்பு
டெல்லி: பொருளாதார ரீதியாக 10% இடஒதுக்கீடு வழங்குவதில் தவறு இல்லை, ஆனால் இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை நீக்கியது தவறு, அதனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ் ரவீந்திர பாட் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். நீதிபதி பாட்டின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதாக தலைமை நீதிபதி யு.யு லலித் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதில் 5ல் 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
தலைமை நீதிபதி லலித், நீதிபதி எஸ் ரவீந்திர பாட் ஆகியோர் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது

தீர்ப்பு
தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பாட், பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளனர். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம். திரிவேதி மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இந்த இடஒதுக்கீட்டை ஆதரித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர். இதனால் உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உறுதியாகி உள்ளது.

விளக்கம்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விளக்கம் அளித்து உள்ளது. இதில் பொருளாதார ரீதியாக 10% இடஒதுக்கீடுவழங்குவதில் தவறு இல்லை, ஆனால் இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை நீக்கியது தவறு, அதனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ் ரவீந்திர பாட் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இதை தலைமை நீதிபதி யுயு லலித் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் தனியாக தீர்ப்பு வழங்காமல் பாட் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். பாட் தனது தீர்ப்பில், நமது அரசியலமைப்பு சட்டம் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

எதிரான இடஒதுக்கீடு
சமூக நீதிக்கு எதிரானது இந்த இடஒதுக்கீடு. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை இந்த இடஒதுக்கீடு கேள்வி கேட்கிறது. பின்தங்கிய வகுப்பினர் பெறக்கூடிய இடஒதுக்கீட்டிற்கு எதிரானதாக இது அமைந்து விடும். பொருளாதார இடஒதுக்கீட்டில் எஸ், எஸ்டி, ஓபிசி பிரிவினர் இடம்பெறாதது தவறு. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இந்த இடஒதுக்கீடு சட்ட திருத்தம்.

சமத்துவம்
சமத்துவத்திற்கான இதயத்தில் இந்த இடஒதுக்கீடு திருத்தம் குத்துகிறது . பெரும்பான்மையாக ஏழைகள் எஸ். சி, எஸ்டி பிரிவில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக இந்த இடஒதுக்கீடு இருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கொண்டு வருவதை நான் எதிர்க்கவில்லை. 50 சதவிகித இடஒதுக்கீடு கட்டுப்பாட்டை மீறுவது என்பது தவறானது.

விதிமீறல்
அது சமத்துவத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல். 50 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குவது என்பது மிகவும் தவறானதாக இருக்கும். இது மற்றவர்களுக்கான வாய்ப்புகளை கெடுக்கும். 50 இடஒதுக்கீடு கட்டுப்பாட்டிற்கு அதிகமாக தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு உள்ளது. இது விதிமீறல். பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு கொடுக்கலாம். ஆனால் இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை நீக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி பாட் தீர்ப்பு வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications