என் உறவினருக்கு ஆக்சிஜன், பிளாஸ்மா கிடைக்கலை- ட்விட்டரில் குமுறிய மாஜி பாஜக எம்.பி தருண் விஜய்
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமது உறவினர் ஒருவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கவில்லை, பிளாஸ்மாவும் கிடைக்கவில்லை என ட்விட்டரில் உதவி கேட்டு குமுறியிருக்கிறார் மாஜி பாஜக எம்.பி. தருண் விஜய்.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பஞ்சஜன்யா ஏட்டின் முன்னாள் ஆசிரியர் தருண் விஜய். பாஜகவின் எம்.பி.யாகவும் பணியாற்றினார்.

ட்விட்டரில் தருண் விஜய்
தருண் விஜய் தமது ட்விட்டர் பக்கத்தில், 91 வயதாகும் உறவினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்கவில்லை; பிளாஸ்மா கிடைக்கவில்லை என குமுறியிருந்தார். மேலும் நாம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்கிற விரக்தியையும் வெளிப்படுத்தி இருந்தார்.

தாஜா பதிவுகள்
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தருண் விஜய்யே இப்படி ட்விட்டரில் பகிரங்கமாக புலம்பியிருப்பது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இந்த ட்விட்டர் பதிவுக்குப் பின்னர், இரவு 11.30, அதிகாலை 1 மணிக்கெல்லாம் உதவிக் கரம் நீட்டும் போன்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான சூழலில் பிரதமர் மோடிக்கு துணையாக இருப்போம் என்றெல்லாம் பாஜக மேலிடத்தை தாஜா செய்யும் பதிவுகளையும் போட்டு வருகிறார் தருண் விஜய்.

மத்திய அமைச்சர் வி.கே.சிங்
ஏற்கனவே தேசத்தின் முன்னாள் ராணுவ தளபதியும் மத்திய அமைச்சருமான வி.கே. சிங், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமது சகோதரருக்கு உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் மருத்துவமனையில் படுக்கை கூட கிடைக்கவில்லை என ட்விட்டரில் உதவி கேட்டிருந்தார். தேசத்தின் அமைச்சருக்கே இந்த நிலையா என்கிற கேள்வியை வி.கே.சிங்கின் ட்விட்டர் பதிவு எழுப்பியிருக்கிறது.

மருத்துவ கட்டமைப்பு மோசம்
இப்போது பாஜக- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவரான தருண் விஜய்யும் இப்படி பதிவிட்டிருக்கிறார். வட இந்திய மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பு என்பது படுமோசமாக இருக்கிறது என்பதை இத்தகைய சம்பவங்கள் அடுத்தடுத்து வெளிச்சம் போட்டு காட்டுகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications