வங்கதேசம் பற்றி எரியுதே.. பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்? அடித்து சொல்லும் Ex இந்திய தூதர்
டெல்லி: வங்கதேசத்தில் இப்போது மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்நாட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதற்கிடையே வங்கதேசத்தில் இப்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மையில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீட்டை நிராகரிக்க முடியாது என்று முன்னாள் இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த பல வாரங்களாக அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக முதலில் தொடங்கிய போராட்டங்கள், பல இடங்களில் வன்முறையாக வெடித்தது.

அந்நாட்டின் பிரதமர் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்தன. அங்கே நிலைமை கையை மீறிச் சென்ற நிலையில், ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
வெளிநாட்டுச் சக்திகள்: இதற்கிடையே இந்த விவகாரத்தில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீட்டை நிராகரிக்க முடியாது என்று முன்னாள் இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்த அவர், ""வங்கதேசத்தின் நலனுக்கும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் எதிராக இருக்கும் இந்த செயலில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு இல்லை என்று நம்மால் நிராகரிக்க முடியாது.
இதுபோல குழப்பமான சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் பலரும் காத்திருக்கிறார்கள் என்பதை நிராகரிக்க முடியாது. அதேநேரம் இந்த வன்முறை என்பது முதலில் வங்கதேசத்தில் உள்ள சில அடிப்படை பிரச்சினைகளால் ஏற்பட்டது என்றே நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
முறைகேடுகள்: வங்கதேசத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் ஹசீனா வென்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று உலக நாடுகள் கூட குற்றஞ்சாட்டின. தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விசாரிக்கவும், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கதேசத்தை அமெரிக்கா வலியுறுத்தியது. குறிப்பாக அமெரிக்கா இந்த விவகாரத்தில் கடுமையான கருத்துகளைக் கூறி வந்தது. ஆனாலும், பெரியளவில் விசாரணைக் குழு எதையும் ஹசீனா அமைக்கவில்லை.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவே அங்கே மக்கள் போராட்டம் தொடங்கியது. உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டைக் குறைத்துத் தீர்ப்பு வழங்கிய நிலையில், போராட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றும் சொல்லி போராட்டம் தொடர்ந்தது. இதன் காரணமாகவே ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார்.
பொருளாதாரம் மோசம்: வங்கதேசத்தில் இப்போது நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது. அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் டாக்காவில் உள்ள ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர். மேலும், அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையையும் சேதப்படுத்தினர். இதற்கிடையில், வங்கதேசத்தில் நிலவும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்தியா-வங்கதேச எல்லை உஷார்படுத்தப்பட்டது. வங்கதேச எல்லைப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
காரணம் இதுதான்: அங்கே இந்தளவுக்கு நிலைமை மோசமாக என்ன காரணம் என்பதை விளக்கிய ஷ்ரிங்கலா, "வெளியே பார்த்தால் இது ஏதோ மாணவர்கள் முன்வைத்த ஒதுக்கீட்டுப் பிரச்சினை போலத் தெரியும். ஆனால் அடிப்படையில் வங்கதேசத்தில் பல பொருளாதார பிரச்சினைகள் இருந்தன. கொரோனா பாதிப்பு வங்கதேச பொருளாதாரத்தை மிகக் கடுமையா பாதித்தது. உக்ரைன் மோதலால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்தன.
இந்த பொருளாதார பிரச்சினைகளே மக்கள் கொந்தளிக்க முக்கிய காரணம். அங்குள்ள எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறி இதைப் பயன்படுத்திக் கொண்டன. அவர்கள் போராட்டத்தில் இணைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications