நாடு முழுக்க அமுல் பால் விலை மீண்டும் உயர்வு! லிட்டருக்கு 2 ரூபாய்.. குஜராத்தில் மட்டும் இல்லை! அடடே
டெல்லி: பிரபல பால் நிறுவனமான அமுல் பால் விலை ஏற்றம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரம் இக்கட்டான சூழலில் உள்ளது. அமெரிக்கா போன்ற உலக வல்லரசு நாடுகளே திணறி வருகிறது.
அமெரிக்காவில் நிலைமையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கி எடுக்கும் நடவடிக்கைகளால், உலக நாடுகளும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் இந்த பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

விலைவாசி உயர்வு
இதன் காரணமாகவே இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அடுத்தாண்டு வரை இதே நிலைமை இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வால் பொதுமக்கள் துன்பத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அமுல் நிறுவனம் தனது பால் விலையை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது.

பால் விலை உயர்வு
குஜராத் தவிர அனைத்து மாநிலங்களிலும் ஃபுல் கிரீம் பால் மற்றும் எருமைப் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஃபுல் கிரீம் பால் லிட்டருக்கு ரூ.61க்கு விற்கப்பட்ட நிலையில், இது இப்போது ரூ.63ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தான் தீவனம் உள்ளிட்ட உள்ளீடு செலவுகள் அதிகரித்ததால் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்ன
இது தொடர்பாக அமுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இப்போது பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அதிகபட்ச சில்லறை விலை 4% உயர்ந்து உள்ளது. இருப்பினும், இது சராசரி உணவுப் பணவீக்கத்தை விடக் குறைவாகவே உள்ளது. பால் உற்பத்திக்கான செலவு அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம். கால்நடை தீவனச் செலவு மட்டும் ஓராண்டில் 20% அதிகரித்துள்ளது" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

குஜராத்திற்கு இல்ல
அமுல் நிறுவனம் என்பது எந்தவொரு நபருக்கும் சொந்தமானது இல்லை. அது குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பிற்குச் சொந்தம். அதாவது. குஜராத் விவசாயிகளுக்குச் சொந்தமானது ஆகும். இப்போது அமுல் நிறுவனம் அறிவித்து இருக்கும் விலைவாசி உயர்வு என்பது குஜராத் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டு உள்ளது. குஜராத்தில் பழைய விலையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பணவீக்கம்
அதிகரிக்கும் பணவீக்கம் என்பது இந்தியாவிற்குப் பெரிய சவாலாக உள்ளது. இந்தியாவின் சில்லறை பணவீக்கம், 2-6%க்குள் இருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கி கொள்கை இருப்பினும், தொடர்ந்து மூன்றாவது காலாண்டாகப் பணவீக்கம் அதிகமாகவே உள்ளது. ஆகஸ்ட் மாதம் 7%இல் இருந்த பணவீக்கம் இப்போது மேலும் அதிகரித்து 7.41%ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு
பணவீக்கம் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்த்து வருகிறது. கடந்த மாதம் தான் நாட்டின் முக்கிய பால் நிறுவனங்களான அமுல் மற்றும் மதர் டெய்ரி பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருந்தது. தமிழ்நாட்டிலும் கூட அரசு நிறுவனமான ஆவின் தவிர மற்ற தனியார் நிறுவனங்கள் சமீபத்தில் பால் விலையை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications