முதல் நாளே சோதனை- புதிய நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீராங்கனைகள் பேரணி- இணையும் விவசாயிகள்!
டெல்லி: நாட்டின் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட முதல்நாளே தேசத்துக்கு பெருமை சேர்க்கும் மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு நீதி கோரி புதிய நாடாளுமன்றம் நோக்கி முற்றுகைப் பேரணி நடத்த உள்ளனர். இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். 1947-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை புதிய லோக்சபாவில் பிரதமர் மோடி நிறுவினார். தமிழ்நாட்டு ஆதீனங்களின் ஆசி பெற்று இந்த செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். இந்நிகழ்வில் சர்வமத பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிலையில் டெல்லியில் தங்களுக்கு நீதி கோரி போராடும் மல்யுத்த வீராங்கனைகள், புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளனர். மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷணின் பாலியல் அத்துமீறல்களுக்கு நடவடிக்கை கோரியே இந்த போராட்டத்தை மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. இன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு ஜந்தர் மந்தர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீசார் முயற்சித்தனர்.
இதனிடையே புதிய நாடாளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தில் விவசாயிகளும் இணைய உள்ளனர். மேலும் விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கூடும் மகா பஞ்சாயத்தையும் கூட்ட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதாக அறிவித்த மல்யுத்த வீராங்கனைகள் சிலர் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் ஒன்று கூடாத வகையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லைகளில் உள்ள குருத்வாராக்களும் போலீஸ் முற்றுகையில் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் வழியாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்குள் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடத்தில் பங்கேற்க இருக்கின்றனர். இதனால் அனைத்து டெல்லி எல்லைகளும் முழு உஷார் நிலையில் உள்ளன.












Click it and Unblock the Notifications