ஜிடிபியை விட 100% அதிக கடனில் சிக்கும் இந்தியா! IMF பகீர் .. நிதியமைச்சகம் கூல் விளக்கம்
டெல்லி: இந்தியாவின் பொருளாதார சூழல் தற்போதையதை போலவே நீடித்தால், மிகப்பெரிய கடன் வலையில் நாடு சிக்கும் என ஐஎம்எஃப் கணித்திருந்தது. ஆனால் இந்த கணிப்புக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
சர்வதேச அளவில் கடந்த 2008ம் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையிலிருந்து உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த கூற்றை உலக நாடுகளின் தற்போதைய ஆட்சியாளர்கள் மறுத்திருந்தாலும், அவ்வப்போது வெளியாகும் சில ஆய்வு முடிவுகள் இதனை உறுதி செய்து வருகின்றன. இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வருடாந்திர மதிப்பாய்வு கட்டுரையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

அதில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான கடன், அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்ளாட்டு உற்பத்தியை (ஜிடிபி) விட முறையே 160%, 140% மற்றும் 200% என அதிகரிக்கும் என கணித்திருக்கிறது. அதேபோல இந்தியாவின் கடன் 2028ம் நிதியாண்டில் ஜிடிபியை விட 100 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. இந்த கணிப்புகள் பொருளாதார மந்த நிலையின் தீவிரத்தை பேசுகிறது என ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். மறுபுறம், இந்த கணிப்புக்கு மத்திய அரசு கடும் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
அதாவது, "இந்தியாவின் கடன் குறித்து பேசியிருக்கும் ஐஎம்எஃப், சில விஷயங்களை பாசிட்டிவாக கூறியிருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் மேம்பட்டால், கடன் 70 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என ஐஎம்எஃப் குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல உள்நாட்டு கடன் பற்றி கவலைப்பட வேண்டாம். அதனால் பெரும் ஆபத்து ஏற்படாது. 2020-21 நிதியாண்டில் 88% ஆக இருந்த கடன், 2022-23 நிதியாண்டில் 81% ஆகக் குறைந்துள்ளது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். எனவே கடன் குறித்த அச்சம் தேவையற்றது" என ஐஎம்எஃப்-ன் எச்சரிக்கைக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
என்னதான் நிதியமைச்சகம் விளக்கமளித்தாலும், பொருளாதார ஆய்வாளர்கள் இந்தியாவின் நிலை குறித்து கடுமையாக எச்சரித்துள்ளனர். ஆசிய கண்டத்தில் மிக முக்கியமான வணிக தளமாக இந்தியா இருக்கிறது. இதற்கு காரணம் இங்குள்ள மக்கள் தொகைதான். உலகின் மிக அதிகமாக மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், வாங்கும் சக்தியும் அதிகம். எனவே உலகின் ஏறத்தாழ அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் இந்திய சந்தையை கைப்பற்ற போட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்திய மக்களின் வாங்கும் திறன் கடந்த சில ஆண்டுகளாக சரிந்துள்ளது. அல்லது, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிகரிக்கவில்லை.
இதற்கு காரணம் செல்வ குவிப்புதான். அதாவது, இந்தியாவில் இருக்கும் தங்கம், வைரம், நிலங்கள், விலையுயர்ந்த கார்கள், கட்டிடங்கள், ஆடம்பர சொகுசு வீடுகள் என அனைத்து சொத்துக்களில் 40 சதவிகிதம், நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 1 சதவிகிதத்தினரிடம் குவிந்து கிடக்கிறது. இவர்கள்தான் நாட்டின் பெரும் பணக்காரர்கள். ஆனால் மறுபுறம், நாட்டு மக்கள் தொகையில் பாதி மக்களிடம் வெறும் 3 சதவிகித செல்வம்தான் இருக்கிறது.
எனவே இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசுகள் தொடர்ச்சியாக கடனை வாங்கி குவித்து வருகின்றன. இது ஒரு கட்டத்தில் அபாய கட்டத்தை எட்டும்போது, இந்தியாவும், இலங்கை மாதிரி பொருளாதார பிரச்னையில் சிக்கும் என்பதைதான் ஐஎம்எஃப் சூசகமாக எச்சரித்திருக்கிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications