400 சீட்டா? சீனா ஆக்கிரமித்த 4000 சதுர கிமீ நிலத்தை மீட்க பாருங்க.. அமித்ஷாவுக்கு கபில் சிபல் பதிலடி
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என பேசும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலில் சீனா ஆக்கிரமித்துள்ள 4,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்திருந்தார். இதற்கு கபில் சிபல் அளித்த பதில்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் சிறப்பு சலுகை கொடுத்துள்ளது என்கிறார் அமித்ஷா. இது ஆட்சேபனைக்குரிய கருத்து. நாட்டின் உள்துறை அமைச்சருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படியான விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது.
வழக்குகளில் 2,3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்த தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியும். வழக்குகளில் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் அவரால் பிரசாரம் செய்ய முடியும். பாஜகவின் பிரிஜ் பூஷண் அப்படித்தான் பிரசாரம் செய்கிறார். ஒருவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலே ஏன் பிரசாரம் செய்யக் கூடாது?
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து அமித்ஷா பேசியிருப்பது நீதிமன்ற அவமதிப்புதான். இவ்வாறு கபில் சிபல் கூறினார்,
மேலும் அமித்ஷா 400 இடங்களுக்கு மேல் பாஜக வெல்லும் என கூறி வருகிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் எனவும் பேசி வருகிறார். அப்படி 400 இடங்களைப் பெறாமல் போனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறாமல் விட்டுவிடுவீர்களா? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படத்தான் வேண்டும். அதற்கு முன்னதாக சீனா ஆக்கிரமித்துள்ள 4,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை மீட்க மத்திய அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கபில் சிபல் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications