கையில் மீனுடன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் பாஜக வேட்பாளர்கள்! மேற்கு வங்கத்தில் வினோதம்!
டெல்லி: மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் கட்டம் முடிந்திருந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.29ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பாஜக வேட்பாளர்கள், கையில் மீனை ஏந்தி ஓட்டு கேட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் மீன் என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது பெங்காலிகளின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் ஒரு பகுதி. இதை பாஜக அழிக்க நினைப்பதாக, திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. எனவே, மக்களின் மனதைக் கவர மீனை ஒரு தேர்தல் கருவியாக பாஜக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.

பாஜகவும் மீனும்
“பாஜக ஆட்சிக்கு வந்தால் அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கும்” என்ற திரிணாமுல் காங்கிரஸின் பிரசாரத்தை முறியடிக்க, பாஜக வேட்பாளர்கள் கையில் மீனுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிதான்நகர் பாஜக வேட்பாளர் டாக்டர் சரத்வத் முகர்ஜி, ஒரு பெரிய கட்லா மீனை கையில் ஏந்தியபடி பிரசாரம் செய்தது சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்றிருக்கிறது.
புதிய அச்சம்
முதல்வர் மம்தா பானர்ஜி, மீன் மற்றும் சோறு பெங்காலிகளின் உரிமை என்றும், டெல்லியில் இருந்து வருபவர்கள் (பாஜக) இந்த அடையாளத்தை அழிக்கப் பார்ப்பதாகவும் பிரசாரம் செய்து வருகிறார். இது ஒரு வலுவான பிரசாரம். பெங்காலிகளின் பண்பாடு சார்ந்த விவகாரம் இது. எனவே, மம்தாவின் பிரசாரம் மக்களிடையே புதிய அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
மோடியின் வழிபாடு
இதை உடைக்க பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது. குறிப்பாக, நேற்று பிரதமர் நரேந்திர மோடி, வட கொல்கத்தாவில் தனது பிரம்மாண்ட சாலைப் பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, வரலாற்றுச் சிறப்புமிக்க தந்தானியா காளிபாரி கோயிலில் வழிபாடு நடத்தினார். இது மம்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கொடுக்கப்படும் பதிலடியாக பார்க்கப்படுகிறது.
மம்தாவுக்கு பதிலடி
இந்தக் கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. இங்கு அன்னை காளிக்கு அசைவப் பிரசாதம் (மீன் உள்ளிட்டவை) படைக்கப்படும் தனித்துவமான வழக்கம் உள்ளது. அசைவப் பிரசாதம் வழங்கப்படும் கோயிலில் பிரதமர் வழிபட்டது, பெங்காலி கலாச்சாரத்திற்கும் அவர்களின் உணவுப் பழக்கத்திற்கும் பாஜக மதிப்பளிக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்தும் ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இப்படியாக, மம்தாவுக்கு பாஜக பதிலடி கொடுத்து வருகிறது.
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, அம்மாநில மக்கள் தொகையில் 65% க்கும் அதிகமானோர் வாரந்தோறும் மீன் உட்கொள்கின்றனர். நம்மூரில் சிக்கன் எப்படி பொதுவானதோ, அதபோல் அங்கு மீன் ரொம்பவும் சாதாரணமான உணவு.












Click it and Unblock the Notifications