ஒரு பக்கம் சீனா.. இன்னொரு பக்கம் பாகிஸ்தான்.. இருமுனை தாக்குதலை சமாளிக்க முப்படைகளும் ரெடி
இருமுனை தாக்குதலை எதிர்க்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது
டெல்லி: ஒருபக்கம் சீனா, இன்னொரு பக்கம் பாகிஸ்தான் என இருமுனை தாக்குதலை சமாளிக்க இந்தியா தயார் நிலையில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.. குறிப்பாக 15 நாட்களுக்கு போர் புரிய தேவையான அனைத்து ஆயுதங்களையும் இருப்பில் வைத்திருக்கவும் ராணுவம் தயாராகி வருகிறது.
லடாக் - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.. லடாக் கல்வான் மோதல் எப்போது ஆரம்பித்ததோ, அப்போதே இருந்தே இந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.. அதேபோல, வடகிழக்கு பிராந்தியத்தை ஒட்டிய எல்லைகளிலும் சீனா தனது கட்டமைப்புகளை அதிகரித்து வருகிறது.

இன்னொரு பக்கம் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. எல்லை தாண்டி தீவிரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள் அதிகரித்தபடியே உள்ளது.
அதனால், இந்த இரு நாடுகளையும் சமாளிக்க, மற்றும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.. அதனால்தான் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் இருப்பு அதிகமாக வைத்துக் கொள்ள ராணுவம் முடிவு செய்துள்ளது. எந்த தாக்குதல் வந்தாலும் சரி, அதனை எதிர்த்து போரிட தேவையான மருந்துகள் 10 நாட்களுக்கு கையிருப்பில் ராணுவம் வைத்திருப்பது வழக்கம்.
ஆனால், இப்போது சீனா, பாகிஸ்தான் என்ற 2 நாட்டின் இருமுனை தாக்குதலை எதிர்கொள்ளவே, 15 நாட்களுக்கு தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்களை இருப்பில் வைப்பதற்கான நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து தளவாடங்களை வாங்குவதற்காக ரூ.50ஆயிரம் கோடிக்கும் மேல் செலவிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் பேசிய முப்படை தளபதி விபித் ராவத், "நிலம், கடல், ஆகாயம் என எந்த வழியிலும் நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு முப்படைகளும் உச்சபட்ச தயார்நிலையில் உள்ளன.
லடாக் எல்லைப் பகுதியில் இயல்பு நிலையை மாற்றுவதற்கு சீனா முயன்றால், தக்க பதிலடி கொடுப்பதற்கு முப்படைகளும் தயாராக உள்ளன.. அதே வேளையில், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன" என்றார்.












Click it and Unblock the Notifications