முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்எஸ் கில் உடல்நலக்குறைவால் காலமானார்
டெல்லி: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
தேர்தல் ஆணையத்தின் தலைவராகக் கடந்த 1996 முதல் 2001 வரை இருந்தவர் எம்எஸ் கில் எனப்படும் மனோகர் சிங் கில். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் நிலையில், அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார். அவருக்கு வயது 86. அவரது இறுதிச் சடங்கள் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஷிரோமணி அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல் முதலமைச்சராக இருந்தபோது ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் தான் மனோகர் சிங் கில்.. டிஎன் சேஷன் தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையாக இருந்த போது, அவர் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு டிசம்பர் 1996 முதல் ஜூன் 2001 வரையிலான காலகட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராகவும் இருந்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் அரசியில் இணைந்தது இதுவே முதல்முறையாகும்.
அவர் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வானார். 2008இல் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மனோகர் சிங் கில்லுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.
இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு கில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications