ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்.. 3 முறை முதல்வராக இருந்தவர்
ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தையுமான சிபு சோரன் காலமானார் (Shibu Soren passes away). சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சிபு சோரன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிபு சோரன் 3 முறை ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தவர்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார். அவருக்கு வயது 81. சிறுநீரகக் கோளாறால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிபு சோரன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிபு சோரன் 3 முறை ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தவர் ஆவார். கடந்த 2005, 2008, 2009 ஆகிய 3 முறை முதல்வராக இருந்தவர். முன்னாள் மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

ஹேமந்த சோரன் தந்தை
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியின் நிறுவனர் சிபு சோரன். ராஜ்யசபா எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர், ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவிகளை வகித்த சிபு சோரன் இன்று தனது 81 வயதில் காலமானார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவரது உடல்நிலை, கடந்த சில நாட்களாக மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.
அவரது மறைவுச் செய்தியை, ஷிபு சோரனின் மகனும், தற்போது ஜார்க்கண்ட் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், "அன்பிற்குரிய திஷோம் குருஜி எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்," என்று அவர் மிகுந்த துயரத்துடன் பதிவிட்டார்.
அரசியல் பயணம் மற்றும் சாதனைகள்
சிபு சோரன், சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர், பீகாரின் ராம்கர் மாவட்டத்தில் பிறந்தார். 1972 ஆம் ஆண்டு ஏ.கே. ராய் மற்றும் பினோத் பிஹாரி மகாதோவுடன் இணைந்து JMM-ஐ நிறுவினார். இது அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கிய கட்டமாக அமைந்தது. 8 முறை சிபு சோரன் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 2 முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்தார். அவரது இரண்டாவது ராஜ்யசபா பதவிக்காலம் தற்போது நடந்து வந்தது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவையின் போது, சிபு சோரன் மத்திய நிலக்கரி துறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 2000 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் தனி மாநிலம் உருவான பின்னர் முதல் முறையாக முதல்வராக பதவியேற்றார். ஷிபு சோரனுக்கு எதிராக ஆள் கடத்தல் வழக்கு பாய்ந்தது. இதில் ஷிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தும்கா தொகுதி
1980 ஆம் ஆண்டில் தும்கா தொகுதியிலிருந்து முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிபு சோரன், அந்த தொகுதியை JMM-இன் வலுவான கோட்டையாக மாற்றினார். ஆனால், 2019 தேர்தலில் பாஜக வேட்பாளர் நலின் சோரனிடம் 45,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே சிபு சோரன் உடல்நலன் பாதிக்கப்பால் தீவிர அரசியல் இருந்து விலகியே இருந்தார். இந்த நிலையில் தான் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.












Click it and Unblock the Notifications